உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

உலக மக்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் நாள் (அனைத்துலக ஊனமுற்றோர் நாள்) என டிசம்பர் 3ஐ அனுசரிக்கிறது. 1981ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐ.நா சபை அறிவித்தது. 1982ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதியை பன்னாட்டு மாற்றுத் திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் நாளாக கொண்டாடப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.பொதுவாக தன்னார்வலர்கள் இந்நாளில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல முன்னெடுப்புகள் நடத்தப்படுகின்றன.

பல நாடுகள், அரசு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஊனமுற்றோரின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களை தீட்டி செயல்படுத்துகின்றன. அவர்களின் முயற்சிகளுக்கு பல்வேறு வகைகளில் உறுதுணை புரிகின்றன. சமுதாயத்தில் ஊனமுற்றோர்களின் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் ஊனமுற்றோர்கள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.