இப்போதே பங்குகளை வாங்குவது நல்லது; ஜூன் 4-க்குப் பிறகு பங்குச் சந்தை உயரும்: அமித் ஷா நம்பிக்கை

பாஜகவின் மோசமான செயல்திறன் காரணமாகவே பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில், அது வதந்தி என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இப்போதே பங்குகளை வாங்குவது நல்லது. வரும் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தைகள் கணிசமான ஏற்றத்தை சந்திக்கும் எனஅவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்த கேள்விக்கு அமித் ஷா அளித்த பதில்: பங்குச் சந்தையை தேர்தலுடன் இணைக்க கூடாது. ஆனால்,நிலையான அரசு அமையும்பட்சத்தில் அது பங்குச் சந்தைசிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.

பங்குச் சந்தை கடந்த சில அமர்வுகளில் பல்வேறு காரணிகளால் 16 முறை பெரும் திருத்தங்களை கண்டுள்ளன. 7 கட்ட தேர்தல் முடிந்து ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதில் பாஜக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமையும். அதன் பிறகு இந்திய பங்குச் சந்தைகள் கணிசமான ஏற்றத்தை சந்திக்கும். எனவே, பங்குகளை வாங்க இதுவே சரியான தருணம். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.