அமெரிக்க அமைச்சருக்கு பதிலடி

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன், சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டு பேசுகையில், உலகளவில் மத சுதந்திரத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து துணை நிற்கும். இதற்காக சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவோம். அடுத்த மாதம் பிரிட்டன் அமைச்சரவை கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்படும். அனைத்து மக்களும் அவரவர் மத வழிபாடுகளை சுதந்திரமாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான பாரதத்தில் பல மதத்தினர் வசிக்கின்றனர். அங்கு சிலர் மீதும், வழிபாட்டுதலங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. சீனாவில், கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு மாறானவர்களின் வழிபாட்டு தலங்கள் அழிக்கப்படுகின்றன.ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவற்றில் மத சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது. பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றத்தின் பேரில், கடந்த ஆண்டு 16 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சிறுபான்மையினர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்’ என்று கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்ச செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, ‘சர்வதேச உறவுகளில் வாக்கு வங்கி அரசியல் கடைபிடிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இயற்கையாகவே பன்முகத்தன்மை கொண்ட சமூகமாக திகழும் பாரதம், மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை மதிக்கிறது. அமெரிக்காவுடனான எங்கள் கலந்துரையாடல்களில், இன மற்றும் இனரீதியாக தூண்டப்பட்ட தாக்குதல்கள், வெறுக்கத்தக்க குற்றங்கள், துப்பாக்கி வன்முறை உட்பட கவலைக்குரிய விஷயங்களை நாங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தியுள்ளோம்’ என பதிலடி தந்துள்ளார்.