அமராவதி எம்.பி. நவநீத் ராணாவின் சாதிச் சான்றிதழ் உண்மையானதுதான்: உச்ச நீதிமன்றம்

மகாராஷ்டிராவின் அமராவதி தனித் தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நவ்நீத் ராணா சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார். இதையடுத்து இவரது பட்டியலின சாதிச் சான்றிதழ் பொய்யானது எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2021 ஜூன் 8-ம் தேதியன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, நவநீத் ராணா பொய்யான, ஜோடிக்கப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி மொச்சி பட்டியலின சாதிச் சான்றிதழை பெற்றுள்ளார்.
எனவே அது ரத்து செய்யப்படுகிறது. உண்மையில் ராணா சீக்கிய-சமர் சாதியை சேர்ந்தவர் என்பது ஆவணப் பதிவுகள் காட்டுகிறது. மோசடி செய்து சாதிச் சான்றிதழை பெற்றதற்காக ராணாவுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராணா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
நவ்நீத் ராணாவின் சாதிச் சான்றிதழ் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு ஆவணங்களை முறையாக பரிசீலித்து அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நவ்நீத் ராணா சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். தற்போது அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.