அமரர் முத்துசாமி என்றால் தியாகம், துணிவு!

கன்னியாகுமரி ஆர்.எஸ்.எஸ். தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் முத்துசாமி. நாகர்கோவில் நகரத்தில் ஒரு மளிகைகடை நடத்தி வந்தார்.

* தினசரி காலையில் பூஜை செய்வது அவரது வழக்கம். சரியாக 7.00 மணிக்கு வீட்டில் ஒரு பெல் அடிக்கும். மனைவி, மகள், மருமகள் உள்பட வீட்டில் உள்ள அனைவரும் பூஜை அறை முன்பு கூடுவர். ஆர்.எஸ்.எஸ். கிளைகளில் அன்றாடம் பாடும் சங்க பிரார்த்தனையை  குடும்பத்தில் உள்ள அனைவரும் பாடுவார்கள். தனது சரீரம் ஒத்துழைக்கும் காலம்வரை இதைக் கடைப்பிடித்து வந்தார்.

* அவசர நிலை காலத்தில் முத்துசாமிஜி மிசா சட்டத்தின் கீழ் கைதாகி 21 மாதங்கள் பாளையங்கோட்டையில் சிறைவாசம் செய்தார். அதுசமயம் அவரது ஒரே மகனின் திருமணம் நடைபெற்றது. பரோலில் வர மறுத்துவிட்டார். புதுமண தம்பதிகள் திருமணக் கோலத்தில் சிறைச்சாலை சென்று அவரிடம் ஆசி பெற்றார்கள்.

*அயோத்திக்கு கரசேவைக்கு 1991ல் சென்றபோது அவருக்கு 73 வயது. சங்கத்தில் சிறப்பு அனுமதி பெற்று சென்று வந்தார். தான் பட்ட கடினமான அனுபவங்களை உற்சாகத்துடன் தெரிவிப்பார். ஸ்வயம்சேவகர்கள் சில இடங்களில் இவரை தொட்டிலில் சுமந்து கொண்டு சென்றார்களாம். ராமருக்கு ஆலயம் எழுப்புவதில் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக ஸ்வயம்சேவகர்கள் இருக்க வேண்டும் என்று கூறுவார். தேசிய அவமானம் துடைக்கப்பட வேண்டும் என்று கூறுவார். அண்மையில் காலமான அன்னாரது ஆத்மா நற்கதி அடைய பிரார்த்தனை செய்வோம்.