உலகம் கொண்டாடும் யோகா

பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட தீவிர முயற்சி காரணமாக, ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா சபை 2014ல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 2015ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 8வது சர்வதேச யோகா தினமான நேற்று பிரசித்தி பெற்ற மைசூரு அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், மைசூரு அரச குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பொது மக்களும் இதில் பங்கேற்று பிரதமருடன் யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “யோகா நமக்கு அமைதியைத் தருகிறது. யோகாவின் அமைதி என்பது தனிநபர்களுக்கு மட்டுமல்ல, நமது சமூகத்திற்கும், நாடுகளுக்கும் உலகிற்கும் அமைதியைக் கொண்டுவருகிறது. யோகா நமது பிரபஞ்சத்திற்கு அமைதியைக் கொண்டுவருகிறது. மைசூர் போன்ற பாரதத்தின் ஆன்மீக தலங்களின் பல நூற்றாண்டுகளாக வளர்க்கப்பட்டு வந்த யோக முறை இன்று உலக சுகாதாரத்திற்கு வழிகாட்டியாக மாறியுள்ளது. இன்று யோகா உலகளாவிய ஒத்துழைப்பிற்கான அடிப்படையாக மாறி, மனித குலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வின் நம்பிக்கையை வழங்குகிறது. யோகா என்பது இன்று வீடுகளையும் தாண்டி உலகம் முழுவதும் பரவி வருவதை நாம் காண்கிறோம். இது ஆன்மீக உணர்தலை குறிப்பாக, முன்னெப்போதும் இல்லாத அளவு பெருந்தொற்று பரவிவந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் இயற்கையான மற்றும் பகிரப்பட்ட மனித உணர்வை மெருகேற்றியது.

யோகா இப்போது உலகளாவிய திருவிழாவாக மாறிவிட்டது. யோகா எந்த ஒரு தனி மனிதனுக்கும் சொந்தம் அல்ல, இது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் உரியது. எனவேதான், இம்முறை சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் – மனிதகுலத்திற்கான யோகா. இந்த முழுப் பிரபஞ்சமும் நமது உடலிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும் தான் தொடங்குகிறது. பிரபஞ்சம் நம்மில் இருந்துதான் தொடங்குகிறது. யோகா நமக்குள் இருக்கும் ஆன்மாவை நமக்கு உணர்த்துகிறது, விழிப்புணர்வை உருவாக்குகிறது. நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் ‘அமிர்த பெருவிழாவை’ கொண்டாடும் தருணத்தில் பாரதம் யோகா தினத்தை கொண்டாடுகிறது.

யோகா நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக அல்லாமல், இன்று அது நமது வாழ்க்கை முறையாக மாறிவிட்டது. யோகா ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் இடத்திற்குமானது என்று கட்டுப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. நாம் எவ்வளவு மன அழுத்ததில் இருந்தாலும், சில நிமிட தியானம் நம்மை ஆசுவாசப்படுத்தி, நமது உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. எனவே, யோகாவை கூடுதல் பணியாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நாம் யோகாவை அறிந்து கொள்ள வேண்டும், யோக வாழ்வை வாழ வேண்டும். நாம் யோகத்தை அடைய வேண்டும், யோகத்தை கடைப்பிடிக்க வேண்டும். நாம் யோகா வாழ்வை வாழத் தொடங்கும் போது, அது தினம் செய்ய வேண்டிய பயிற்சியாக இல்லாமல் நமது ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் கொண்டாடுவதற்கான ஒரு செயல்முறையாக மாறும்” என்று கூறினார். மேலும், இந்த கருப்பொருளை உலகளவில் எடுத்துச் சென்றதற்காக ஐ.நாடு சபை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

79 நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் கூட்டுப் யோகா முயற்சியான ‘கார்டியன் யோகா ரிங்’ என்ற அற்புத நிகழ்ச்சியைப் பற்றி விளக்கிய பிரதமர், “உலகம் முழுவதும் எப்படி சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக நகர்கிறதோ, அதேபோல் பூமியின் ஏதேனும் ஒரு புள்ளியில் இருந்து பார்த்தால், பங்கேற்கும் நாடுகளில் நடைபெறும் பெருமளவிலான யோகா நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக ‘ஒரு சூரியன், ஒரே பூமி’ என்பது போல் தெரியும். “இந்த யோகா பயிற்சிகள் ஆரோக்கியம், சமநிலை மற்றும் ஒத்துழைப்புக்கு அற்புதமான உத்வேகத்தை அளிக்கின்றன” என்று கூறினார்.