தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்கள்

இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் 133வது நிறுவன தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில், “தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்கள்: 1857 முதல் குடியரசு வரை” என்ற கண்காட்சியை மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தொடங்கி வைத்தார். இதில் பேசிய அமைச்சர், “சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்த அறியப்படாத வீரர்களின் நினைவுகளைப் போற்றுவதும் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய வீராங்கனைகளை முன்னிலைப்படுத்துவதும் பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணம் ஆகும். 1857ம் ஆண்டு முதல் சுதந்திரம் அடைந்தது வரை தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ஆற்றிய பங்களிப்பை இக்கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது. அடக்குமுறை காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான பாரதத்தின் போராட்டம், குழந்தைத் திருமணம் மற்றும் தீண்டாமை போன்ற சமூகத் தீமைகளை ஒழிப்பது, பெண் கல்வியை எளிதாக்குவது, சுதந்திர பாரதத்துக்கான அரசியலமைப்பை உருவாக்குவது போன்றவற்றில் எப்போதும் பெண்கள் முன்னணியில் இருந்துள்ளனர். முதல் பாரத சுதந்திரப் போரில் இருந்து பாரதக் குடியரசுப் பிரகடனம் வரையிலான பாதையில் அழிக்க முடியாத அளவில் பெண்கள் தடம் பதித்துள்ளனர். இந்தக் கண்காட்சியானது, காப்பகக் களஞ்சியத்தில் இருந்து எடுக்கப்பட்ட உண்மையான ஆவணங்களைக் காட்சிப் படுத்தியுள்ளது. களஞ்சியத்தின் 80 சதவீதம் வரை அதாவது, அரசின் அதிகாரப்பூர்வ கோப்புகள், பிரபலங்களின் தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் தேசிய ஆவணக் காப்பக நூலகத்தில் உள்ள அரிய புத்தகங்களின் கணிசமான சேகரிப்புகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. நமது தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டின் 93 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தில் அறியப்பட்ட, குறைவாக அறியப்பட்ட மற்றும் அறியப்படாத பெண்களின் பங்களிப்புகள் இந்தக் கண்காட்சியில் இருக்கின்றன. இந்தப் பெண் தலைவர்கள் பலதரப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள். பலதரப்பட்ட தொழில்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள், இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்கள் (ஐ.என்.ஏ), சமூக சீர்திருத்தவாதிகள், கல்வியாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் என அங்கீகரிக்கப்பட்டனர்” என கூறினார். 30 ஏப்ரல் 2023 வரை அனைத்து நாட்களிலும் இக்கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.