சம்பளம் தருமா தி.மு.க அரசு?

பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் பாரத மகளிர் கூடைப்பந்து அணி தலைவி அனிதா பால்துரைக்கு, தமிழக பா.ஜ.க சார்பில் பாராட்டு விழாவும், கார் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் தமிழக பா.ஜ.க சார்பில், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மத்திய அரசு பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயும்; டீசல் 5 ரூபாயும் குறைத்தது. பல மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைத்துள்ளன. ஆனால், தி.மு.க அரசு, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தெரிவித்தும் கூட, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளது. மக்களை முட்டளாக்கி ஏமாற்றியே தி.மு.க ஆட்சிக்கு வந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. தமிழக கடன் சுமை எவ்வளவு என்று தெரிந்து தான், தி.மு.க இந்த தேர்தல் வாக்குறுதியை அளித்தது. ப. சிதம்பரத்திற்கு பெட்ரோல், டீசல் விலை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. அவர்தான் இந்த விலை உயர்விற்கு முழு காரணம். தமிழக அரசின் கடன் சுமை 5.10 லட்சம் கோடி. இந்த ஆண்டு 70 ஆயிரம் கோடி புதிய கடன் வாங்க உள்ளது. ஒரு மாநிலம், அதன் மாநில மொத்த உற்பத்தியில் 25 சதவீதம் தான் கடன் வாங்க முடியும். இந்த அளவு அடுத்த ஆண்டு எட்டப்படும். இந்நிலை தொடர்ந்தால், 2023ல் அரசு அலுவலர்களுக்கு மாத சம்பளம் கொடுக்ககூட தி.மு.க அரசிடம் பணம் இருக்காது. பா.ஜ.கவின் ஏழு ஆண்டுகள் ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது’ என தெரிவித்தார்.