காவியை பார்த்து அதிருப்தி ஏன்?

கர்நாடகாவில், சுவாமி விவேகானந்தர் பெயரில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 8,100 புதிய வகுப்பறைகளை கட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து வகுப்பறைகளும் ஒரே கட்டமைப்பிலும் காவி வண்ணத்தில் அமைக்க திட்டமிட்டு உள்ளது. அவற்றின் சுவர்கள் மற்றும் தூண்களில் சுவாமி விவேகானந்தர் கூறிய வாசகங்கள் இடம் பெறும். இந்த திட்டம் நேற்று கலபுரகி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே, “ஆசிரியர்கள் பற்றாக்குறை, புத்தகங்கள், சீருடைகள், மதிய உணவு ஆகியவை இல்லாமை, படிப்பில் இருந்து பாதியில் மாணவ மாணவிகள் வெளியேறுவது நடக்கிறது. ஆனால், பள்ளிகளுக்கு காவி நிறம் பூசுவதில் அரசு ஆர்வம் காட்டுகிறது” என டுவிட்டரில் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, இதுபோன்ற விஷயங்களில் எதிர்கட்சிகள் தேவையின்றி அரசியல் செய்வது சரியல்ல. காவி என்பது தேசிய கொடியில் உள்ள ஒரு நிறம். அதனை பார்க்கும்போது, காங்கிரசுக்கு ஏன் அதிருப்தி ஏற்படுகிறது? என கேள்வி எழுப்பினார்.