சோனியா மவுனம் ஏன்?; பா.ஜ., கேள்வி

சனாதனம் மீதான விமர்சனம் குறித்த விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா மவுனம் காப்பது ஏன் ? என பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.  அமைச்சர் உதயநிதி, தி.மு.க., எம்.பி., ஆ.ராசா ஆகியோர் சனாதனம் குறித்து விமர்சனம் செய்தனர். இதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டில்லியில் நிருபர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: ஓட்டு வங்கி அரசியலுக்காக சனாதனம் குறித்து விமர்சனம் செய்கின்றனர். சனாதன தர்மத்திற்கு ‘ எதிராக இண்டியா கூட்டணி உள்ளது. இக்கூட்டணியினர், சனாதனத்தை எய்ட்ஸ் நோயுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். ஏற்கனவே, உத்தவ் தாக்கரேவும், சமாஜ்வாதியும் சனாதன தர்மத்தை விமர்சனம் செய்துள்ளன. இந்த விவகாரத்தில் சோனியா மவுனம் காப்பது ஏன்? அவர் மவுனம் காப்பது, விமர்சனத்தை ஏற்றுக் கொண்டது போலவே தெரிகிறது. காங்., மூத்த தலைவர்கள் யாரும் இதுவரை, ராமர் கோயிலுக்கு செல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.