தாழ்வு மனப்பான்மை எதற்கு?

தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தான். கடவுளும் மனமிறங்கி அவன் முன்னே தோன்றினார்.

அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்? என் வாழ்க்கையின் மதிப்புதான் என்ன? என்று கேட்டான்.

கடவுள் சிரித்துக்கொண்டே, அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா, ஆனால் விற்கக்கூடாது என்றார்.

அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்தான். அந்த வியாபாரியோ அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான். அந்த கல்லை ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் காண்பித்து கேட்டதற்கு ஒரு மூட்டை கிழங்கு தருவதாக சொன்னான். நகைக்கடையில் காண்பித்ததற்கு 50 ஆயிரம் பொற்காசுகள் தருவதாக சொன்னார் நகை கடைக்காரர். இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னார்.

மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அந்த கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் இது. உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்று கொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணையே இல்லை என்று கூறினார்.

குழப்பமடைந்த அவன், திரும்பிவந்து கடவுளை பார்த்து நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு கடவுள், பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக் கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் சொன்னார். அதேபோல, உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்யலாம். அதற்கெல்லாம் கவலைப்படாதே. உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் நீ கண்டறிவாய். மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.

கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே. ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே. தாழ்வு மனப்பான்மை வேண்டாம். முதலில், நம்மைப் பற்றிய உயர்ந்த எண்ணம் நமக்கு வரவேண்டும். உங்களுக்கு நிகர் நீங்களே, யாரும் உங்களுக்கு இணை கிடையாது.