வைரமுத்து மீதான நடவடிக்கை என்ன?

டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகாட் உள்ளிட்டோர் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி கடந்த பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்திருக்கின்றன. அவ்வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்ததோடு, டெல்லி காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து செங்கோல் வளைந்து விட்டது என்றும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “புகார் கூறிய மல்யுத்த வீராங்கனைகள் எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. புகார் அளித்தவுடன் கைது செய்ய வேண்டும் என்று சொல்வது ஏற்புடையதல்ல” என கூறினார். மேலும், ஏ.என்.ஐ செய்தி ஏஜென்ஸிக்கு அளித்த பேட்டியில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் செங்கோல் வளைந்து விட்டது என்று கூறியுள்ளார். அதேசமயம், முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான நபராக திகழும் பாடலாசிரியர் வைரமுத்து மீது 19 பாலியல் புகார்கள் இருக்கின்றன. ஆனால், அவர் மீது தமிழக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் வைரமுத்துவை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. குறைந்தபட்சம் அவர் மீது எப்.ஐ.ஆராவது பதிவு செய்திருக்க வேண்டுமல்லவா?” என்று கேள்வி எழுப்பினார்.