நமது தர்மத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்

சமூகம் தங்களுடன் இல்லை என்று மக்கள் உணரும் சூழ்நிலைகளை சில மிஷனரிகள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் மோகன் பாகவத் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், கோவிந்த்நாத் மகாராஜின் சமாதியை மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தார். பிறகு உரையாற்றிய அவர், மத மாற்றத்தில் ஈடுபடும் மிஷனரிகளை சாடினார். “நாம் நமது சொந்த மக்களைப் பார்க்கவில்லை. நாம் அவர்களிடம் செல்வதில்லை, அவர்களிடம் கேட்பதில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து சில மிஷனரிகள் அங்கு வந்து வாழ்கிறார்கள், அவர்களின் உணவை சாப்பிட்டு, அவர்களின் மொழியில் பேசி, பின்னர் அவர்களை மதம் மாற்றுகிறார்கள்.

100 ஆண்டுகளாக அவர்கள், இங்குள்ள மக்கள் அனைவரையும் மதம் மாற்ற பாரதத்திற்கு வந்தனர். அவர்கள் சில நூற்றாண்டுகளாக இங்கு பணியாற்றி வருகின்றனர். எனினும், நமது முன்னோர்களின் முயற்சியால் நம்து வேர்கள் வலுவாக இருந்ததால் அவர்களால் அதில் வெற்றி பெற முடியவில்லை. அவர்களை (ஹிந்துக்களை) வேரோடு பிடுங்கி எறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வஞ்சகத்தை சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். நம்பிக்கைகளை சீர்குலைப்பதற்காக ஏமாற்றுபவர்கள் மதத்தைப் பற்றி சில கேள்விகளை எழுப்புகிறார்கள். நமது சமூகம் இதற்கு முன்பு இதுபோன்றவர்களை சந்தித்ததில்லை, எனவே மக்கள் சந்தேகிக்கிறார்கள். இந்த பலவீனத்தை நாம் அகற்ற வேண்டும். இதற்குப் பிறகும் நம் சமூகம் அசையவில்லை. ஆனால் மக்கள் நம்பிக்கையை இழந்து, சமூகம் தங்களுடன் இல்லை என்று உணரும்போது மாறுகிறார்கள்.

கல்யாண் ஆசிரமத்தின் (ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் ஊக்கம் பெற்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம்) உதவி கிடைத்ததால், 150 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள மதம் மாறி கிறிஸ்தவர்களாக இருந்த ஒரு கிராமம் முழுவதுமே ‘சனாதனி’ ஆனது. ‘சனாதன தர்மம்’ இத்தகைய நடைமுறைகளை நம்பாததால், நம் நம்பிக்கையைப் பரப்புவதற்கு நாம் வெளிநாடு செல்லத் தேவையில்லை. இங்கு (பாரதத்தில்) உள்ள பாரதிய மரபுகள் மற்றும் நம்பிக்கையின் விலகல் மற்றும் சிதைவை அகற்றி, அதன் வேர்களை, நமது தர்மத்தை வலுப்படுத்த வேண்டும்” என கூறினார்.

பிறகு, மோகன் பாகவத் ஒரு தர்ம சபையில் உரையாற்றினார் மற்றும் குருத்வாராவிற்கு சென்று வணங்கினார். குருத்வாராவைப் பார்வையிட்ட பிறகு, குரு கிரந்த் சாஹிப் ஹிந்துக்களுக்கு உத்வேகம் அளிப்பதாகக் கூறினார். திங்கட்கிழமை, சரஸ்வதி நகரில் உள்ள டாக்டர் ஹெட்கேவார் நினைவுக் குழுவின் அலுவலக கட்டடத்தை பகவத் திறந்து வைத்ததோடு புர்ஹான்பூரில் உள்ள சங்க தொண்டர்களிடமும் உரையாற்றினார்.