தொகுதிக்கு 100 இடங்களில் மனதின் குரல்

பிரதமரின் நூறாவது மனதின் குரல் நிகழ்வை தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தொகுதிக்கு நூறு இடங்கள் வீதம் ஒளிபரப்ப தமிழக பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க மாநில, மாவட்ட நிர்வாகிகள், அணிப்பிரிவு தலைவர்களுடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம், மனதின் குரல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகாயினி ஆகியோர் கணொலி வழியாக பேசினர். அப்போது, “உலகில் எந்த தலைவரும் பொதுமக்களுடன் வானொலியில் இதுபோல அதிகம் பேசியது இல்லை. 2ம் உலகப் போரின்போது அமெரிக்க அதிபர் 13 வாரங்கள் வானொலியில் பேசினார். ஆனால், 99 முறை பேசியவர் பிரதமர் மோடி மட்டுமே. இதில், தமிழ் மொழி, தமிழக சாதனையாளர்களை பிரதமர் கௌரப்படுத்தியுள்ளார். நூறாவது மனதின் குரல் நிகழ்வை தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தொகுதிக்கு நூறு பூத்களில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் நூறு பேர் பங்கேற்க வேண்டும். இதில் பங்கேற்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த சமுதாய தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை அழைத்து மனதின் குரலை பார்க்க வைக்க வேண்டும். நூறாவது மனதின் குரல் நிகழ்வை சரித்திர சாதனை நிகழ்வாக நாம் மாற்ற வேண்டும். மேலும் இதுவரை நடைபெற்ற மனதின் குரலில் பிரதமர் பாராட்டியவர்களை, கட்சி அலுவலகத்துக்கு அழைத்து பாராட்ட வேண்டும். இந்த நிகழ்வை நமோ செயலியில் பதிவு செய்ய வேண்டும். பாரதத்திலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் மனதின் குரல் ஒளிபரப்பு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும். இம்முறை அணிப் பிரிவு நிர்வாகிகளும் கூட மனதில் குரல் நிகழ்வை ஒளிபரப்ப கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என அண்ணாமலை கூறினார்.