போரட்டம் என்ற பெயரில் வன்முறை

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்புக்கு எங்களை பலிகடா ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்? என அந்த தனியார் பள்ளியின் உரிமையாளரின் உறவினரும், பள்ளியின் மேற்பார்வையாளருமான சுபாஷ் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மாணவி ஸ்ரீமதி 6ம் வகுப்பு முதல் எங்கள் பள்ளியில் தான் பயின்று வந்தார். நன்றாக படிக்கக் கூடியவர். பெற்றோரின் விருப்பத்தின் பேரில் மாணவியை வேறு ஒரு பள்ளியில் சேர்த்தனர். அந்தப் பள்ளியை மாணவி விரும்பாததால் மீண்டும் கொண்டுவந்து இங்கே அவரது பெற்றோர் சேர்த்துவிட்டனர். விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர்களிடம் சகஜமாகவே மாணவி பழகினார். 13ம் தேதி அதிகாலையில் பால்காரர்தான் கீழே விழுந்துகிடந்த மாணவியை முதலில் பார்த்தார். அவர் தந்த தகவலின் பேரில் அங்கிருந்தவர்கள் ஸ்ரீமதியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இதன் பிறகு அவரது பெற்றோருக்குத் தகவல் அளித்தோம். பள்ளியில் பாதுகாப்போடுதான் மாணவியை நாங்கள் வைத்திருந்தோம், அவர் விடுதியைவிட்டு வெளியேறும் நோக்கில் தவறி விழுந்தாரா, தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் குதித்தாரா எனத் தெரியவில்லை. அவரது கடிதம் தற்கொலையை உறுதிபடுத்துகிறது. நாங்களும் காவல்துறையிடம் புகார் அளித்தோம். விசாரணைக்கு ஒத்துழைத்தோம். 17ம் தேதி காலையில் 600 பேருக்கு உணவு தயாரிக்க காவல் துறையினர் கூறினர். ஆனால், 100க்கும் குறைவான காவல்ர்களே வந்திருந்தனர். போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் வன்முறைக் கும்பல் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து தாக்கினர். எங்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறினோம். வாயில்லா ஜீவன்களான மாடுகளை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மாட்டின் பால் சுரக்கும் மடியை பிளேடால் அறுத்துள்ளனர். பள்ளியில் இருந்த 40 மாடுகளில் 36 மாடுகளை கொண்டு சென்றுவிட்டனர். மாணவி தற்கொலையில் பள்ளியை சூறையாடிவிட்டார்கள். இதுஎந்தவிதத்தில் நியாயம்? மாணவி பற்றி அவருடைய தாயாருக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் அவர் ஏன் பள்ளி மீது அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார் என்று தெரியவில்லை. மாணவியின் தாயார் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. இந்த கலவரத்தால் சுமார் ரூ. 30 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இதை யார் ஈடு செய்வது? இன்று குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினரை, அன்றே குவித்திருந்தால் இத்தகைய நிலைஏற்பட்டிருக்காது. சமூக வலைதளத்தின் உண்மைத் தன்மையை அறியாயாமல், பெங்களூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தெல்லாம் வந்த இளைஞர்களும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களை இப்போதுபோலீஸார் கைது செய்திருக்கிறார்கள். மாணவி பற்றியும் தற்கொலை பற்றியும் சிபிசிஐடி விசாரணையில் முழு உண்மைகளும் வெளிவரும் என்று உறுதியாக நம்புகிறோம்’ என கூறியுள்ளார்.