விரைவில் இணையும் விக்ராந்த்

கொச்சின் கப்பல் கட்டும் தளத்திடம் இருந்து விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலை தற்போது கடற்படை பெற்றுள்ளது. இத்துடன் விமானம் தாங்கி கப்பலை வடிவமைத்து உள்நாட்டிலேயே கட்டும் திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் பாரதமும் இணைந்துள்ளது. இந்த கப்பல் 76 சதவீதம் பாரதத் தயாரிப்பு பொருட்களைக் கொண்டுள்ளது. அடுத்த மாதம் இந்தக் கப்பலை அதிகாரப்பூர்வமாக இந்திய கடற்படை படையில் இணையும். பாரதம் தனது 75வது சுதந்திர விழாவை கொண்டாட உள்ளது. இந்த விழாவில் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலும் படையில் இணைக்கப்படும். இதனுடன் சேர்த்து இந்திய கடற்படையில் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் செயல்பாட்டில் இருக்கும். இந்த கப்பல் இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு பணியை அதிகரிக்க உதவும். கப்பலில் உள்ள 88 மெகாவாட் சக்திக்கொண்ட நான்கு கேஸ் டர்பைன் என்ஜின் உதவியுடன் 28 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. 262 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் 4,5000 டன்கள் எடையுடையது. இந்தக் கப்பல் கட்டுமானத்தில் பி.ஹெச்.இ.எல், பி.இ.எல், கெட்ரான், கிர்லோஸ்கர், எல்&டி உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கப்பலில் தற்போது ‘மிக் 29கே’ போர் விமானம், ‘கமோவ் 31, எம்.எச்., 60ஆர்’ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.