விஜய் மல்லையாவுக்கு சிறை

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் சுமார் ரூ. 9,000 கோடி அளவில் கடன் மோசடி செய்து வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர், 201ல் நாட்டைவிட்டு வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தார். இவரை பாரதம் கொண்டுவர மத்திய அரசு தொடர் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், மல்லையாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஒரு வழக்கு தொடர்ந்தது. அதில், கடனை திருப்பி தராமல் விஜய் மல்லையா பண பரிவர்த்தனை செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை மீறி அவரின் குழந்தைகளுக்கு ரூ. 317 கோடி பண பரிவர்த்தனை செய்ததாக ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி விஜய்மல்லையா வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் விஜய்மல்லையா ஆஜராக அறிவுறுத்தியது. அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் வழக்கின் தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி, நீதிமன்ற அவமதிப்பிற்காக 4 மாதம் சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும்,கடனாகப் பெற்ற 40 மில்லியன் டாலர் தொகையை 8 சதவீத வட்டியுடன் நான்கு வாரங்களுக்குள் விஜய் மல்லையா மற்றும் அவரது மகன் செலுத்த வேண்டும் என்றும் தவறினால் சொத்துக்கள் முடக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, வெளிநாடு தப்பிச் சென்ற பொருளாதார குற்றவாளிகளான விஜய் மல்லையா, நீரவ் மோடி, முகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து இதுவரை ரூ.18,000 கோடி மீட்கப்பட்டுள்ளது என மத்திய அரசு வழக்கறிஞர் கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.