ராகுலை கண்டித்த துணை குடியரசுத் தலைவர்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசும்போது ‘மைக்’ அணைக்கப்படுகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கரன்சிங் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர், “பாரதத்தின் தற்போதைய வரலாற்று சாதனைகளை உலகமே பாராட்டுகிறது. ஆனால், நம்மிடையே உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிதும் சிந்தனையின்றி, நியாயமின்றி நமது நாட்டையும் நாடாளுமன்றத்தை இழிவுபடுத்தி வருகிறார்கள். அவர்கள் வெளிநாட்டில் அப்படி பேசுவதை யாரும் நியாயப்படுத்த முடியாது. அப்படி பேச என்ன தைரியம்? இந்த விவகாரத்தில் நான் மௌனமாக இருந்தால், அரசியல் சட்ட கடமையை நான் நிறைவேற்றவில்லை என்று அர்த்தம்” என்று பேசி ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.