முதுகெலும்புள்ள அரசானால் தடையை நீக்கவும்

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் தடை செய்யப்பட்டு உள்ளதற்கு பா.ஜ.கவின் மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது டுவிட்டர் பதிவில், “‘தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திட்டமிட்ட ரீதியில் திரை அரங்குகளிலிருந்து நீக்கியிருக்கிறது தமிழக அரசு. சட்ட ரீதியாக வெளியிட தடை செய்ய முடியாத நிலையில், தன் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் உண்மையை மூடி மறைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றதாக இறுமாப்பு கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையை உலகுக்கு உணர்த்திய கலை படைப்பை உதாசீனப்படுத்தியுள்ளதோடு, ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்படும் விதத்தை எடுத்து சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வையும், முன்னெச்சரிக்கையையும் உணர்த்துகிற ஒரு திரைப்படத்தை முடக்கி பெருமை கொள்கிறது தமிழக அரசு. இந்த முயற்சியில் திரை அரங்கு உரிமையாளர்களை மிரட்டிப் பேச வைத்திருக்கிறது அரசு. ரோகிணி திரை அரங்கு உரிமையாளர் மற்றும் திரை அரங்கு உரிமையாளர் சங்க பொது செயலாளருமான பன்னீர் செல்வம், “படத்திற்கு மட்டுமல்ல, மால்களுக்கு வரும் கூட்டமும் குறைந்து விட்டது, அதனால் தான் படத்தை திரை அரங்குகளிலிருந்து நீக்கி விட்டோம்” என்று கூறியிருப்பது, அந்த திரைப்படம் உரக்க சொல்லும் உண்மையை பொறுக்க முடியாத மத அடிப்படைவாத பயங்கரவாத சக்திகள் மால்களில் ஊறு விளைவிக்கும் என அச்சப்படுகிற அளவிற்கு தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் ஊடுருவி உள்ளனவா என்ற கேள்வியை எழுப்புகிறது.

அது போன்ற மிரட்டல்கள் ஏதும் திரை அரங்குகள் மற்றும் மால்களுக்கு விடப்பட்டனவா என்பதை பன்னீர்செல்வம் விளக்க வேண்டும் அல்லது காவல்துறை அவரிடம் கேட்டு தெளிவுபடுத்த வேண்டும். மக்களை பயமுறுத்த இது போன்ற தேவையற்ற விஷயங்களை இவர்களின் மூலம் சொல்ல வைத்து மக்களை பதட்டத்தில் ஆழ்த்துகிறது தி.மு.க அரசு. உண்மையிலேயே மத அடிப்படைவாத பயங்கரவாத சக்திகளால் அச்சுறுத்தல் இருக்குமேயானால், அந்த பயங்கரவாத தீய சக்திகளை அடக்கும் முயற்சியில் இறங்குவதை விடுத்து, திரை அரங்குகளிலிருந்து திரைப்படத்தை நீக்குவது கோழைத்தனம் மட்டுமல்ல அபாயகரமானதும் கூடபயங்கரவாத சக்திகளுக்கு அஞ்சி சமரசம் செய்து கொள்வதும், அவர்களுக்கு பயந்து பின் வாங்குவதும் மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். மத அடிப்படைவாத தீய சக்திகளை இரும்புக்கரம் பொறுப்பும், கடமையும், ஆற்றலும் தமிழக காவல்துறைக்கு உள்ளது. ஆனால், ஓட்டுக்காக, ஒட்டு தரும் பதவிக்காக, அந்த பதவி தரும் பணத்துக்காக காவல்துறையினரின் கைகளை அரசியல்வாதிகள் கட்டிப் போடக்கூடாது. தைரியமான அரசாக இருந்தால், வெளிப்படையான அரசாக இருந்தால், மதசார்பற்ற அரசாக இருந்தால், முதுகெலும்புள்ள அரசாக இருந்தால், திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெற்ற ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை திரையிடுவதை தடை செய்யும் அனைத்து முயற்சிகளையும் அரசு கைவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.