கல்விக் கட்டண புகார்

உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, கொரோனா சூழலைக் கருத்தில்கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள், பெற்றோரிடம் ஆண்டு கல்விக் கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். பேருந்து உட்பட இதர கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சில தனியார் பள்ளிகள் முழு கல்விக் கட்டணங்களையும் செலுத்த பெற்றோரை நிர்பந்திப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு சில பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்கின்றன. கட்டணம் செலுத்தாத மாணவர்களை இணைய வகுப்பில் பங்கேற்க அனுமதிப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதற்காக கல்வித் துறை சார்பில், தனியார் பள்ளிகள் மீதான கல்விக் கட்டணப் புகார்களை தெரிவிக்க 14417 என்ற இலவச உதவி மைய எண் செயல்படுத்தப்படுகிறது. புகார் சம்பந்தமாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும். பள்ளிகள் தொடர்ந்து தவறு செய்தால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிக்கும் பெற்றோரின் தகவல் வெளியே பகிரப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.