அழுத்தம் கொடுக்கும் முயற்சி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆஜராவதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய பேரணி தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “விசாரணை அமைப்புக்கு அழுத்தம் தரும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் இன்று பேரணி நடத்தியுள்ளனர். காந்திகள் குடும்ப ஊழல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதனால், குடும்ப சொத்துக்களை பாதுகாக்கும் முயற்சியாகவே இந்தப் பேரணியை நடத்தியுள்ளனர். 1930களில் அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனம் 5,000க்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை பங்குதாரர்களாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்படிப்பட்ட நிறுவனத்தை இன்று ஒரு தனிப்பட்ட குடும்பம் கையகப்படுத்தியுள்ளது. ஆசோசியேட் ஜர்னல்ஸின் இலக்கு பத்திரிகை நடத்துவதுதான். ஆனால் 2008ல் அந்த நிறுவனம் இனி செய்தித்துறையில் இருக்கப்போவதில்லை என்று கூறி ரியல் எஸ்டேட் தொழிலை ஆரம்பித்தது! இந்நிறுவனத்தை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சி ரூ. 90 கோடி கடன் கொடுத்து  அனைவரும் அறிந்ததே. காங்கிரஸ் கட்சிக்காக நிதி கொடுத்தவர்களுக்கு அந்த நிதி பொது சேவைக்காக அல்ல ஒரு குடும்பத்தின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.