வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள்

திருணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் அனுப்ரதா மோண்டலின் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ நீதிபதி ராஜேஷ் சக்ரவர்த்திக்கு அக்கட்சியை சேர்ந்த பப்பா சாட்டர்ஜி என்பவர், நீதிபதியின் வீட்டில் போதை பொருளை வைத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் போதை பொருள் வழக்கில் சிக்கவைக்கப் படுவார்கள் என மிரட்டல் விடுத்தார். திருணமூல் கட்சியினர் ஒரு நீதிபதிக்கே மிரட்டல் விடுத்தது தேசமெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த அச்சுறுத்தல் குறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு ஒன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு கடிதம் எழுதியது. அதில், ‘மாடு கடத்தல் வழக்கில் சி.பி.ஐ காவலில் உள்ள அனுப்ரதா மோண்டல் பிர்பூம் மாவட்ட திருணமூல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குமிக்க தலைவர். அவருக்காக அக்கட்சியினர் நீதித்துறையையே மிரட்டுவது கவலைக்குரிய விஷயம். நீதித்துறை மீதான இத்தகைய தாக்குதலுக்கு எதிராக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இவ்விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கை உடனடியாக மேற்கு வங்கத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கும் மாற்ற கோருகிறோம்’ எனவலியுறுத்தியுள்ளனர்.