செம்மொழி பூங்காவில் கட்டணம் வசூல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசு சார்பில் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. இதை உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் 28ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த பூங்காவில் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி என்று கூறப்பட்ட நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் ராசிபுரம் நகர தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் புஷ்பா என்பவர், சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலித்து வருகிறார். மேலும், பூங்காவில் குழந்தைகளுக்கு 10 ரூபாய் கட்டணம் என்று ஒரு தகவல் பலகையையும் வைத்து வசூலில் ஈடுபட்டுள்ளார் புஷ்பா. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் புஷ்பாவிடம் இதுகுறித்து கேட்டபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட புஷ்பா, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து 10 ரூபாய் கூட கட்டணம் கட்ட வக்கு இல்லாமல் இங்கு ஏன் வந்தீர்கள்? என்று சிறுவர்களின் பெற்றோர்களை கீழ்தரமாக கேள்விகேட்டு திட்டினார். மேலும், தி.மு.க நகர்மன்றத் தலைவர் கவிதா சங்கர் அறிவுறுத்தலின்படியே இங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறியுள்ளார். யாரும் பணம் கொடுக்க வேண்டாம் என்று ஒரு சிறுமியின் பெற்றோர் கூறவே, அவரை அநாகரீகமாக திட்டியதுடன் இன்னும் 5 நிமிடங்களில் என்ன நடக்கும் என்று பாற்கிறாயா? என மிரட்டி யாருக்கோ தனது அலைபேசியில் இதுகுறித்து கூறினார். இந்த காட்சிகள் அனைத்தையும் அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்தார். இதை கண்ட புஷ்பா, அந்த நபரை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். அங்கு வந்திருந்தவகளையும் குழந்தைகளையும் வெளியேற்றினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறுகையில், “செம்மொழி பூங்காவில் கட்டணம் வசூலிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கட்டணம் வசூலிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.