விக்ரகங்களை வழிபட வேண்டும்

திருப்பூர் மாவட்டம் பழங்கரையில் உலக சிவனடியார்கள் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை வழங்கி பேசிய முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல், ‘இறைவனிடத்தில் இருந்து திருநீறு வாங்குவது மட்டுமின்றி சமய தலைவர்களையும் நாம் மனதார மதிக்க வேண்டும். 60 வயதை கடந்த பிறகு வாழும் ஒவ்வொரு நாளும் இறைவன் கொடுத்த வரம்; அதை இறைப்பணிக்கே அர்ப்பணிக்க வேண்டும். இறைவனின் திருமேனிகளை, சிலைகள் என சொல்லக்கூடாது; விக்ரகம் என சொல்ல வேண்டும். கோயில் அலுவலர்கள் பூஜைகளில் தலையிடக் கூடாது, அவர்கள் கோயில்களில் முறைகேடு இல்லாமல் நிர்வகித்தால் மட்டும் போதும். சென்னை அருங்காட்சியகம், கருவூலம், விக்ரக பாதுகாப்பகம் உள்ளிட்ட இடங்களில் சிறைபட்டிருக்கும் சுவாமி விக்ரகங்களை கோயில்களில் வைத்து வழிபட வேண்டும். அவற்றை நன்றாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அடியார்களுக்கும் உண்டு. அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ், பண்பாடு கலாசாரத்தை அடுத்த தலைமுறையினருக்கென பாதுகாக்க வேண்டும். குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயர்கள் முதற்கொண்டு, கலாசாரம், பாரம்பரியத்தை எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும்’ என பேசினார். இந்நிகழ்ச்சியில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதினம் சரவண மாணிக்கவாசக சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.