பாரதம் குறித்து அறிய வேண்டும்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒரே பாரதம் உன்னத பாரதம் இணைக்கும் பாரதம் தொடர் திட்டம் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த இரண்டு நாள் கருத்தரங்கத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், திருவள்ளுவர் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 9 பல்கலைக்கழகங்களில் இருந்து 156 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, “தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களை உள்ளடக்கியதுதான். ஆனால், தற்போது திராவிடம் என்றால் தமிழ் என சிலர் கூறி வருகின்றனர். வெள்ளையர்கள் தான் பாரதத்தை இணைத்தனர் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. பாரதம் என்பது எப்போதும் ஒருவர் ஆட்சிக்கு கீழ் இருந்தது இல்லை. ஆங்கிலேயர்கள் 1905ம் ஆண்டு வங்கத்தை மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என மத அடிப்படையில் பிரிக்கப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் வ.உ.சி, பாரதியார் போராடினார்கள். இந்தியாவை தெரிந்துகொள்ள புரிந்து கொள்ள வேண்டும் என்றால் பாரதம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பாரதம் குறித்து நமக்கு தெரியப்படுத்தவில்லை. பாரதம் என்பது பல்வேறு கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் பாரதம் என்பது யாரோ ஒருவரின் கீழ் இருப்பதில்லை. பாரதத்தின் வளர்ச்சி என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அது எப்போதும் தர்மத்தை கடைபிடிப்பதாக இருந்தது. முந்தைய காலங்களில் அரசர்கள் தர்மத்தின் வழியில் ஆட்சி நடந்தனர். அவர்கள் தர்மத்தை தவறும் பட்சத்தில் அவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்பட்டனர். 1956ம் ஆண்டு வரை மதராஸ் மாகாணமாக இருந்தது அதன் பின் மொழி அடிப்படையில் கேரளா, கர்நாடக, ஆந்திரா அதிலிருந்து தற்போது தெலுங்கானா என அரசியலுக்காக மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்தவர்கள் நான், நீ என தற்போது பேசி வருகின்றனர். தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியது தான். ஆனால் தற்போது திராவிடம் என்றால் தமிழ் என கூறப்பட்டு வருகிறது. அடிப்படையில் அரசியல் என்பது அதிகாரத்துக்கானது. இது பாரதத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். அரசியல் கட்சிகள் நம்முடைய பார்வையை குறுக்கிவிட்டன. அரசியல் கட்சிகள் அதிகாரத்கிற்காக மொழி அடிப்படையிலும் ஜாதி அடிப்படையிலும், ஜாதியின் உட்கட்டமைப்புகளை எல்லாம் வைத்து அரசியல் செய்வார்கள். பாரதம் என்பது அடிப்படையில் அனைவருக்கும் இடையே உள்ள கலாச்சாரம் மற்றும் ஆன்மிக ஒற்றுமை தான்” என தெரிவித்தார்.