மகளிர் ஆணையத் தலைவிக்கு மிரட்டல்

நடிகைகள் பலர் ‘மீ டூ இயக்கம்’ மூலம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தினர். இதில் பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குனர் சஜித்கானும் ஒருவர். இவர் மீது மட்டும் 10 பெண்கள் பாலியல் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16வது சீசன் நிகழ்ச்சியில் சஜித்கானும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். ‘மீ டூ’ புகாரில் சிக்கிய சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கண்டன குரல் எழுப்பினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஹிந்தி நடிகை மந்தனா கரிமி, தான் சினிமாவை விட்டே விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். மற்றொரு நடிகையான ஷெர்லின் சோப்ரா, ‘சஜித்கான் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த காமகொடூரரை பிக்பாஸ் போட்டியாளராக சல்மான்கான் எப்படி அறிமுகப்படுத்தலாம்’ என்று டுவிட்டரில் விளாசினார். இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியான சுவாதி மலிவால், மத்திய அமைச்சர் அனுராக் தாக்குருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இயக்குனர் சஜித்கான் மீது 10 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அவர் மோசமானவர் என்பது இதன் மூலம் நன்றாகவே தெரிகிறது. அப்படிப்பட்டவரை, சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க செய்வது தவறானது. அவரை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், சஜித்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியதில் இருந்து தனக்கு பல இடங்களில் இருந்தும் பாலியல் மிரட்டல்கள் வருகின்றன என சுவாதி மலிவால் புகார் கூறியுள்ளார்.