பழி வாங்குவதாக மிரட்டல்

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையில் ஒரு அடையாளம் தெரியாத நபர் மீது ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த நபர் பிரபல கேங்க்ஸ்டரும் சமாஜ்வாதி கட்சி அரசியல்வாதியுமான அத்திக் அகமது கொல்லப்பட்டதற்கு ‘பழிவாங்குவோம்’ என்று சமூக ஊடகப் பதிவில் உறுதியளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ‘தி சஜ்ஜத் முகல்’ என்ற அவரது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அந்த டுவீட்டில், “அத்திக்கின் இனம் இன்னும் முடியவில்லை. அவரது மகன் அலி இன்னும் உயிருடன் இருக்கிறார். இன்ஷா அல்லாஹ் அதிகாரம், காலம், நேரம் எல்லாம் மாறும். இந்த நகரம் மீண்டும் அலகாபாத் என்று அழைக்கப்படும். பழிவாங்கப்படும்.” என்ற இடுகை பதிவு செய்யப்பட்டுள்ளது. முகமது ஆலம்கிர் என்ற நபரின் புகாரின் பேரில் பிரயாக்ராஜ் காவல்துறை இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 15ம் தேதி இரவு, பிரயாக்ராஜில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, பத்திரிகையாளர்கள் போல வந்த நபர்களால் அத்திக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஈடுபட்ட அருண் மௌரியா, சன்னி சிங் மற்றும் லவ்லேஷ் திவாரி ஆகிய மூன்று குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.