திருமலை திருப்பதி உலக சாதனை

கொரோனா பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பதி மலைக்கு பக்தர்கள் வருகை சற்று குறைவாக இருந்தது. ஆனால், மற்ற ஆண்டுகளில் திருமலை திருப்பதிக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகின்றனர். அவர்களில் சுமார் 50 லட்சம் பேர் நடைபாதை வழியாக பாதயாத்திரையாக சென்று ஏழுமலையானை தரிசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பணம் செய்து மொட்டை போட்டுக் கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திருப்பதி மலையில் இலவச உணவு வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்த எண்ணிக்கை திருப்பதி மலையில் உள்ளது. இதன் அடிப்படையில் உலக சாதனை புத்தகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இடம்பிடித்துள்ளது. அதற்கான சான்றை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலக சாதனை புத்தக அமைப்பின் பாரத பிரதிநிதி சந்தோஷ் சுக்லா திருப்பதி மலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் வழங்கினார்.