மூன்றாவது வந்தே பாரத் ரயில்

குஜராத்தின் காந்திநகர் மற்றும் மும்பை சென்ட்ரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் காந்திநகரில் இருந்து காலுபூர் வரை பிரதமர் பயணம் செய்கிறார். இந்த ரயில்களின் கூடுதல் சிறப்பம்சமாக, இதுவரை பயன்படுத்தப்பட்ட ஸ்டீலுக்கு பதிலாக எடை குறைந்த அலுமினியம் பயன்படுத்தப்படும். இதனால், 50 டன்கள் எடை குறைவதுடன், குறைவான அளவிலேயே ஆற்றல் தேவைப்படும். பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் இந்த ரயில் 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகும். இதற்கு முன்பு, டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் வந்தே பாரத் ரயில் 2019 பிப்ரவரியிலும், மற்றொரு ரயில் டெல்லியில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா இடையே 2019 அக்டோபரிலும் தொடக்கி வைக்கப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய தலைமுறைக்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.