மனதின் குரல்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  கடந்த நாட்களில், நம்மனைவரின் கவனங்களையும் கவர்ந்த ஒன்று என்றால் அது வேங்கைகள் தான். அது குறித்து உரையாட ஏராளமான செய்திகள் வந்திருக்கின்றன. தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் மக்கள் பாரதத்தில் வேங்கைகள் திரும்ப வந்தமைக்குத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 130 கோடி பாரத நாட்டவர்களும் சந்தோஷப்படுகிறார்கள், பெருமிதம் கொள்கிறார்கள். இதுதான் பாரதம் இயற்கை மீது கொண்டிருக்கும் காதல்.  இந்த விஷயம் குறித்து அனைவரிடமும் உள்ள ஒரு பொதுவான வினா என்னவென்றால், வேங்கையைக் காணும் சந்தர்ப்பம் எங்களுக்கு எப்போது கிடைக்கும் என்பது தான்.

சிறுத்தைகள்: இதற்காக, பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் சூழலுக்கேற்ப, இந்த வேங்கைகள் தங்களை எப்படி தகவமைத்துக் கொள்கின்றன என்பதை பணிக்குழு கண்காணிக்கும். இதனடிப்படையில் சில மாதங்கள் கழித்து ஒரு முடிவு எடுக்கப்படும், அப்போது நீங்கள் வேங்கைகளைப் பார்க்கலாம். இதன் பொருட்டு மைகவ் தளத்தில் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, இதில் மக்கள் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். வேங்கைகள் தொடர்பாக நடக்கும் இந்த இயக்கத்தின் பெயர் என்னவாக இருக்க வேண்டும், இந்த வேங்கைகளுக்குப் பெயர் சூட்டுவது குறித்து ஆலோசனைகளை நீங்கள் அளிக்கலாம்.  இந்தப் பெயர்களும் பாரம்பரியமானவையாக இருந்தால் நன்றாக இருக்கும்; ஏனென்றால், நம்முடைய சமூகம், நமது கலாச்சாரம்-பாரம்பரியம்-மரபோடு தொடர்புடைய எந்த ஒரு விஷயமும், இயல்பாகவே அவற்றை நோக்கி நம்மைக் கவர்கின்றன. நீங்கள் இந்தப் போட்டியில் கண்டிப்பாகப் பங்கெடுங்கள். உங்கள் வெற்றியின் பரிசாக வேங்கையைக் காணக்கூடிய முதல் சந்தர்ப்பம் உங்களுக்கே கூட அமையலாம், யாரறிவார்கள்?

தீன்தயாள் உபாத்யாயா: இன்று தீவிர மனிதநேயவாதியும், சிந்தனையாளரும், மகத்தான தவப் புதல்வருமான தீன்தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாளாகும். எந்த ஒரு நாட்டின் இளைஞரும் தங்களுடைய அடையாளம், கௌரவம் மீது பெருமிதம் கொள்ளும் போது, அவருக்குத் தங்களுடைய அடிப்படை சித்தாந்தம், சிந்தனை ஆகியவை மீது ஈர்ப்பு ஏற்படும். தீன்தயாள் அவர்களின் சிந்தனைகளின் மிகப்பெரிய அழகு என்னவென்றால், அவர் தன்னுடைய வாழ்க்கையில், உலகின் மிகப்பெரிய கொந்தளிப்புக்களைச் சந்தித்தவர். அவர் கருத்தோட்டங்களின் மோதல்களின் சாட்சியாக விளங்கினார். ஆகையால், அவர் ஏகாத்ம மானவ்தர்சனம், அந்த்யோதய் ஆகிய எண்ணங்களை தேசத்தின் முன்பாக வைத்தார். இவை முழுமையாக பாரதத் தன்மை வாய்ந்தவை. நமது நாட்டுக்குரியவை. ஏகாத்ம மானவ்தர்சனம், சித்தாந்தத்தின் அடிப்படையிலான மோதல்கள், தப்பான எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து அது விடுதலை அளிக்கிறது.  மனிதனை சமமாகக் கருதும் பாரதநாட்டு சித்தாந்தத்தை மீண்டும் உலகின் முன்பாக அவர் இருத்தினார்.  ‘ஆத்மவத் சர்வபூதேஷு’ என்று நமது சாஸ்திரங்களிலே கூறப்பட்டிருக்கிறது. அதாவது நாம் அனைத்து உயிர்களையும் ஒன்று போலவே பாவிக்க வேண்டும். நவீன, சமூக, அரசியல் பின்னணியிலும் கூட, பாரத நாட்டு சித்தாந்தமானது எப்படி உலகிற்கு வழிகாட்ட முடியும் என்பதை தீன்தயாள் நமக்குக் கற்பித்தார். சுதந்திரத்திற்குப் பிறகு தேசத்தில் நலிவுற்ற நிலை நிலவிய வேளையில், அதிலிருந்து விடுவித்து, நம்மிடத்தில் விழிப்புணர்வை அவர் தட்டி எழுப்பினார்.  “நமது கலாச்சாரம் மற்றும் அடையாளம் எப்போது வெளிப்படுகிறதோ, அப்போது தான் நமது சுதந்திரம் பொருள் படைத்த ஒன்றாக ஆகும்” என்று அவர் கூறுவதும் உண்டு. இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் அவர் தேசத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்கைத் தீர்மானம் செய்தார். தேசம் அடையும் முன்னேற்றத்தின் தாக்கம், கடைசிப் படிநிலையில் இருக்கும் மனிதன் வரை சென்றடைய வேண்டும் என்று அவர் கூறுவார். சுதந்திரத்தின் அமுதகாலத்தில் தீன்தயாள் அவர்களைப் பற்றி நாம் எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, எந்த அளவுக்கு அவரிடமிருந்து கற்கிறோமோ, அந்த அளவுக்கு தேசத்தை முன்னேற்றிச் செல்ல நம்மனைவருக்கும் உத்வேகம் கிடைக்கும்.

பகத் சிங்: செப்டம்பர் 28ம் தேதியன்று அமுதப் பெருவிழாவின் ஒரு விசேஷமான நாள் வரகிறது. இந்த நாளன்று தான் நாம் பாரத அன்னையின் வீரம்நிறைந்த சத்புத்திரனான பகத் சிங்குடைய பிறந்த நாளைக் கொண்டாடுவோம். பகத் சிங் பிறந்த நாளுக்கு சற்று முன்பாக, அவருக்கு சிரத்தாஞ்ஜலிகளை அர்ப்பணிக்கும் பொருட்டு ஒரு மகத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது.   சண்டிகட்டின் விமான நிலையத்திற்கு இனி பகத் சிங் பெயர் சூட்டப்படும். இது மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று.

சர்ஜிகல் ஸ்ட்ரைக்: நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களிடமிருந்து கருத்தூக்கம் பெற வேண்டும், அவர்களின் இலட்சியங்களைப் பின்பற்றி நடந்து, அவர்கள் கண்ட கனவு பாரதத்தை உருவாக்க வேண்டும், இதுவே, அவர்களுக்கு நாம் செலுத்தும் நினைவாஞ்சலி. தியாகிகளின் நினைவிடங்கள், அவர்களின் பெயரில் இருக்கும் இடங்கள், அமைப்புக்களின்  பெயர்கள் ஆகியன, நமது கடமைகள் குறித்து நமக்கு உத்வேகம் அளிக்கின்றன.  சில நாட்கள் முன்பாகத் தான் தேசம், கர்த்தவ்ய பத்தில் நேதாஜி சுபாஷ்சந்திர போசின் உருவச்சிலையை நிறுவியதன் வாயிலாக இதே போன்றதொரு முயற்சியைச் செய்யப்பட்டது. பகத் சிங்கின் பெயரை சண்டிகட் விமான நிலையத்திற்குச் சூட்டியதுகூட இதே திசையில் வைக்கப்பட்ட ஒரு முன்னேற்றப்படி. நாம் அனைவரும் செப்டம்பர் மாதம் 28ம் தேதியைக் கொண்டாட வேறு ஒரு காரணமும் உண்டு. அது ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ என்ற துல்லியத் தாக்குதல்.

சைகைமொழி: வாழ்க்கை என்ற போராட்டங்களின் நெருப்பிலே புடம் போட்ட ஒரு மனிதன் முன்பாக எந்தத் தடையும் ஒரு தடையல்ல. நாம் இப்படிப்பட்ட சில இப்படி நண்பர்களைச் சந்திக்கிறோம். இவர்கள் ஏதோ வகையான ஒரு உடல்ரீதியான சவாலை எதிர்கொண்டு வருகிறார்கள்.  சிலரால் கேட்க முடியாது, சிலராலோ வாய்மொழி மூலம் தங்களை வெளிப்படுத்த இயலாது.  இப்படிப்பட்ட நண்பர்களுக்கெல்லாம் மிகப்பெரிய துணையாக இருக்கிறது சைகை மொழி. ஆனால், பாரதநாட்டில் பல்லாண்டுகளாக இந்தச் சைகை மொழிக்கான எந்தவொரு தெளிவான சைகைகளும் தீர்மானிக்கப்பட்டதில்லை. தர நிலைகள் இல்லை. இந்த இடர்களைக் களைய 2015ம் ஆண்டில் இந்திய சைகைமொழி ஆய்வு மற்றும் பயிற்சி மையம் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு இதுவரை, 10,000 சொற்களையும், சைகைகளையும் அடங்கிய ஒரு அகராதியை தயார் செய்திருக்கிறது. இரண்டு நாட்கள் முன்பாக, சைகை மொழி நாளன்று, பல பள்ளிகளின் பாடத்திட்டங்களிலும் கூட சைகை மொழி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சைகை மொழியின் தீர்மானிக்கப்பட்ட தரநிலையை நிலைநிறுத்த, தேசியக் கல்விக்கொள்கையிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சைகைமொழியின் அகராதி காணொளியைத் தயாரித்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.  யூ ட்யூபிலே பலர், பல அமைப்புகள், இந்திய சைகைமொழியில் தங்களுடைய சேனல்களைத் தொடங்கியுள்ளனர். லட்சக்கணக்கான மாற்றுத் திறனாளி சகோதர சகோதரிகளுக்கும் இதனால் ஆதாயம் கிடைக்கவிருக்கிறது.

பிரைல் மொழி அகராதி: சில நாட்கள் முன்பாக, பிரைல் மொழியில் எழுதப்பட்ட ஹேமகோசத்தின் ஒரு பிரதி எனக்குக் கிடைத்தது. ஹேமகோசம் என்பது அசாமிய மொழியின் மிகப் பழமையான அகராதிகளில் ஒன்று. இது 19ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. மொழி வல்லுநரான ஹேமசந்திர பருவா இதனைத் தொகுத்திருக்கிறார். ஹேமகோசத்தின் ப்ரைல் பதிப்பு, சுமார் 10,000 பக்கங்கள் கொண்டதாகும், இது 15 தொகுதிகளுக்கும் அதிகமாக அச்சிடப்பட இருக்கிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சொற்கள் மொழியாக்கம் செய்யப்படவிருக்கின்றன. புரிந்துணர்வுடன் கூடிய இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன். இதைப் போன்ற அனைத்து முயற்சிகளும், மாற்றுத் திறனாளி நண்பர்களின் திறன்கள், திறமைகளை மேம்படுத்துவதில் உதவி புரிகின்றன. இன்று பாரதம் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் கூட வெற்றிக்கொடியை நாட்டி வருகிறது. நாமனைவரும் இதன் சாட்சிகளாக இருக்கிறோம்.

யோகக்கலையின் சிறப்பு: சில நாட்கள் முன்பாக சூரத்தில், அன்வீ என்ற சிறுமியைச் சந்தித்தேன். அன்வீயுடனும், அன்வீயின் யோகக்கலையுடனும் நிகழ்ந்த என்னுடைய சந்திப்பு மறக்க முடியதது. அன்வீ, ‘டௌன் சிண்ட்ரோம்’ என்ற மரபணுக் கோளாறால் பிறப்பிலிருந்தே ஏற்படும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர், சிறு பிராயத்திலிருந்தே தீவிரமான இருதய நோயால்  அவதிப்பட்டவர், பிறந்த மூன்று மாதங்களில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த இடர்ப்பாடுகள் அனைத்தையும் தாண்டி, அன்வீயும் சரி, இவருடைய தாய் தந்தையரும் சரி சற்றும் துவளவில்லை. அன்வீயின் பெற்றோர் இந்த டௌன் சிண்ட்ரோம் பற்றிய  அனைத்துத் தகவல்களையும் திரட்டினார்கள், எப்படி அன்வீ மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கலாம் என்பதை முடிவு செய்தார்கள். சின்னச்சின்ன விஷயங்களைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். மிகவும் பொறுமையோடு அன்வீக்குக் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இதனால் அவளின் பெற்றோருக்கும் பெரும் நம்பிக்கை பிறந்தது.  அவர்கள் அன்வீயை யோகக்கலையைக் கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்தினார்கள். அன்வீயால் தனது இரு கால்களிலும் எழுந்து நிற்க முடியாத நிலையிலும் யோகக்கலையைக் கற்றுக் கொள்ள ஊக்கமளித்தார்கள். யோகா பயிற்றுநரும் முதலில் இந்தச் சிறுமியால் எப்படி யோகம் பயில முடியும் என்று குழம்பிப் போனார்.  ஆனால் அன்வீ தனது பெற்றோருடன் சேர்ந்து பயிற்சி பெறத் தொடங்கி, இப்போது யோகக்கலை வல்லுநராகி விட்டார். நாடெங்கிலும் போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்களைக் குவித்து வருகிறார். யோகக்கலையானது, சிறுமி அன்வீக்கு ஒரு புதிய வாழ்வை அளித்திருக்கிறது. யோகம் பயில்வதன் வாயிலாக சிறுமி அன்வீயின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றத்தைக் காண முடிந்தது, உடல் ஆரோக்கியமும் மேம்பாடு அடைந்திருக்கிறது, அவளுக்குத் தன்னம்பிக்கை வியக்கத்தக்க அளவுக்கு அதிகரித்திருக்கிறது, மருந்துகளின் தேவையும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. யோகக்கலையால் அன்வீக்குக் கிடைத்த ஆதாயங்களை அறிவியல்பூவமாக ஆய்வு செய்ய முடிந்தால், அன்வீ ஒரு அருமையான நபராக இருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஐ.நாவின் மற்றொரு அங்கீகாரம்: உடல்ரீதியான, மனரீதியான ஆரோக்கியம் விஷயத்தில் யோகக்கலை அதிக உதவிகரமாக இருக்கிறது என்பதை உலகம் இப்போது ஏற்றுக் கொண்டு விட்டது. குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளில் யோகக்கலை மிகவும் உதவிகரமாக இருக்கிறது. யோகக்கலையின் சக்தியைக் கண்டு ஐ.நா சபையும் ஜூன் மாதம் 21ம் தேதியை சர்வதேச யோகக்கலை தினமாக அறிவித்திருக்கிறது. இப்போது ஐ.நா சபை, பாரதத்தில் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘இந்தியா உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு முயற்சி’க்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது, கௌரவம் அளித்திருக்கிறது. இதன்படி, ரத்த அழுத்த பிரச்சனைகளில் அவதிப்பட்டு வரும் லட்சக்கணக்கானோரின் சிகிச்சை, அரசின் சேவை மையங்களில் செய்யப்பட்டு வருகிறது.  இந்த முன்முயற்சியானது சர்வதேச அமைப்புக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது, இதுவரை காணாத ஒன்று.  இதில் நம்மனைவரின் உற்சாகத்தையும் அதிகரிக்கும் விஷயம், யாருக்கெல்லாம் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டதோ, அவர்களில் கிட்டத்தட்ட பாதியளவு பேர்களுடைய ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

கடற்கரை தூய்மை: மனித வாழ்வின் வளர்ச்சிப் பயணம், நீடித்த வகையிலே கடல், நதி, குளம் என நீரோடு தொடர்புடையது. 7,500 கிலோமீட்டருக்கும் அதிகமான நீண்ட கடற்கரை பாரதத்தின் பேறு. இதன் காரணமாக, கடலோடு நம்முடைய தொடர்பு இணைபிரியாத ஒன்றாக இருந்து வருகிறது. பாரதத்தின் பல்வேறு சமுதாயங்கள், பன்முகத்தன்மைகள் நிறைந்த கலாச்சாரம் மலர்ந்து மணம் பரப்புவதை, நம்மால் இங்கே காண முடியும். இந்தக் கரையோரப் பகுதிகளின் உணவு முறைகள் மக்களை கவர்கின்றன. ஆனால் இந்த சுவாரசியமான விஷயங்களோடு கூடவே ஒரு வருத்தமளிக்கும் பக்கமும் உண்டு. நமது இந்த கரையோரப் பகுதிகளின் சுற்றுச்சூழலோடு தொடர்புடைய பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். சூழலியல் மாற்றம், கடல்சார் சூழலியல் அமைப்புகளுக்கு பெரிய அபாயமாக மாறி வருகிறது. நமது கடற்கரைகளில் பரவியிருக்கும் மாசு பிரச்சனையாகி இருக்கிறது. இதற்கு தீவிரமான, நிரந்தரமான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். தேசத்தின் கரையோரப் பகுதிகளில் சுத்தம் செய்யும் ஒரு முயல்வான ‘ஸ்வச்ச சாகர் சுரக்ஷித் சாகர்’ என்ற தூய்மையான கடல்கள் பாதுகாப்பான கடல்கள் என்பது குறித்துத் தெரிவிக்க விரும்புகிறேன்.  ஜூலை 5ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த இயக்கம், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியான விஸ்வகர்மா ஜயந்தி தினத்தன்று நிறைவடைந்தது. கரையோரப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் நாளும் இதே நாளன்று தான் கடைப்பிடிக்கப்படுகிறது.  சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், 75 நாட்களுக்கு நடைபெற்றது. தொடங்கிய சில காலத்திலேயே மக்களின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இந்த முயற்சியின்படி, தேசமெங்கும் இரண்டரை மாதங்கள் வரை தூய்மை தொடர்பான பல செயல்திட்டங்களைக் காண முடிந்தது. யாரெல்லாம் இந்த இயக்கத்தில் பங்கெடுத்தார்களோ அவர்கள் அனைவருக்கும் நான் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நவராத்திரி: இப்போது தேசத்தின் நாலாபுறங்களிலும் கொண்டாட்டங்களின் குதூகலம் நிரம்பியிருக்கிறது. நாளை நவராத்திரியின் முதலாம் நாள். இந்த நாளன்று நாம் தேவியின் முதல் சொரூபமான அன்னை சைலபுத்ரியின் உபாசனையில் ஈடுபடுவோம்.  அன்றிலிருந்து ஒன்பது நாட்கள் வரையான நியமங்கள், கட்டுப்பாடுகள், விரதங்கள், பிறகு விஜயதசமி நன்னாள். அதாவது ஒருவகையிலே பார்த்தோமேயானால், நம்பிக்கையும், ஆன்மீகமும் ஊடும் பாவுமாகக் கலந்த எத்தனை ஆழமான செய்தி மறைந்திருக்கிறது என்பதை நமது புனித நாட்களில் நம்மால் காண முடியும். ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு வாயிலாக வெற்றி என்பதற்குப் பிறகு வெற்றிக்கான திருநாள், இதுதானே வாழ்க்கையில் எந்த ஒரு இலக்கையும் அடையக்கூடியதான மார்க்கமாக இருக்கிறது. தசராவிற்குப் பிறகு தந்தேரஸும், தீபாவளி புனித நாட்களும் வரவிருக்கின்றன.

உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்: கடந்த சில ஆண்டுகளாகவே, நமது பண்டிகைகளோடு கூடவே, தேசத்தின் ஒரு புதிய உறுதிப்பாடும் இணைந்திருக்கிறது. அது தான் ‘Vocal for Local’ உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்பது. இப்போது நமது பண்டிகைகளின் மகிழ்ச்சியில் நமது உள்ளூர் கைவினைஞர்களுக்கும், கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நாம் இடமளிக்க வேண்டும். வரவிருக்கும் அக்டோபர் மாதம் 2ம் தேதியான அண்ணலின் பிறந்த நாளின் போது, நாமனைவரும் இந்த இயக்கத்தை மேலும் வேகப்படுத்துவோம் என்ற உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். காதி, கைத்தறி, கைவினைப்பொருள் போன்ற அனைத்துப் பொருட்களோடு கூடவே, உள்ளூர் பொருட்களைக் கண்டிப்பாக வாங்குவோம். நம் மக்கள் அனைவரும் இந்தப் பண்டிகைகளின் அங்கமாக ஆனால்தானே இந்தப் பண்டிகைகளின் மெய்யான ஆனந்தம் ஏற்படும். ஆகையினாலே, உள்ளூர் பொருட்களோடு தொடர்புடையவர்களுக்கு நாம் ஆதரவளிக்கவும் வேண்டும். பண்டிகைக்காலத்தில், நாம் அளிக்கும் பரிசுப் பொருட்களில் இவற்றை நாம் இடம் பெறச் செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழலில் கவனம்: இப்போது இந்த இயக்கம் ஏன் மேலும் சிறப்பான ஒன்று என்றால், சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா வேளையிலே, நாம் தற்சார்பு பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். இதன் மூலமாகத் தான் சுதந்திர தாகம் படைத்த போராட்ட வீரர்களுக்கு நாம் மெய்யான நினைவாஞ்சலிகளைச் செலுத்த முடியும். ஆகையால் இந்த முறை காதி, கைத்தறி அல்லது கைவினைப்பொருள் போன்ற இந்த வகைப் பொருட்களை வாங்குவதில் நீங்கள் புதிய சாதனை படைக்க வேண்டும் என்று உங்களிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன். பண்டிகைகளின் போது பேக்கிங் மற்றும் பேக்கேஜிங் செய்யப் பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளின் பயன்பாடு மிகவும் குறைந்து வருவதையும் நம்மால் காண முடிகிறது.  புனிதக் காலங்களில் நெகிழிப் பொருட்களால் ஏற்படும் பிரச்சனைக்குக் காரணமான குப்பையும் கூட, நமது திருவிழா உணர்வுக்கு எதிரானது. ஆகையால் நாம் வட்டார அளவிலே உருவாக்கப்படும் நெகிழியல்லாத பைகளையே பயன்படுத்துவோம். நம் பகுதிகளிலே சணல், பருத்தி, வாழை போன்றவற்றால் ஆன எத்தனையோ வகையான பாரம்பரியப் பைகளின் புழக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. நமது திருவிழாக் காலங்களில் இவற்றுக்கு ஊக்கமளிக்க வேண்டும், தூய்மையோடு கூடவே நமது மற்றும் நமது சுழலின் நலன் குறித்தும் கவனம் செலுத்த வேண்டுவது நமது பொறுப்பல்லவா?

காச நோயற்ற பாரதம்: நமது சாஸ்திரங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறதென்றால் – பரஹித் சரிஸ் தரம் நஹீன் பாயி, அதாவது பிறருடைய நலனுக்கு இணையான, பிறருக்கு சேவை புரிதல், உதவி செய்வதற்கு இணையான அறம் பிறிதொன்று இல்லை. கடந்த நாட்களில், தேசத்திலே, சமூக சேவை என்ற இந்த உணர்வின் மேலும் ஒரு காட்சியைக் காண முடிந்தது. காசநோய் பீடித்த ஏதோ ஒரு நோயாளிக்குப் பொறுப்பேற்று, அவர்களுக்கு ஊட்டச்சத்து நிரம்பிய உணவை அளிக்கும் சவாலை நாட்டில் சிலர் மேற்கொண்டு வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது காசநோயிலிருந்து விடுவிக்கப்பட்ட பாரதம் இயக்கத்தின் ஒரு அங்கமாகும்; இதனடிப்படையில் இருப்பது மக்களின் பங்களிப்பு மற்றும் கடமையுணர்வு. சரியான ஊட்டச்சத்து மூலமாக, சரியான நேரத்தில் கிடைக்கப் பெறும் மருந்துகளால், காசநோய்க்கான சிகிச்சை சாத்தியப்படும். மக்களின் பங்களிப்பு வாயிலாக, இந்த ஆற்றல் துணையோடு, 2025ம் ஆண்டுக்குள்ளாக பாரதம் கண்டிப்பாக காசநோயிலிருந்து விடுதலை அடைந்து விடும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

சிறுதானிய உணவுகள்: கடந்த மாதம் மனதின் குரலில் சிறுதானியங்கள், 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கொண்டாடுவதோடு தொடர்புடைய விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம். இந்த விஷயம் தொடர்பாக மக்களிடம் பெரும் உற்சாகம் காணப்படுகிறது. எப்படி சிறுதானியங்களைத் தங்கள் அன்றாட உணவின் அங்கமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பாக எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்திருக்கின்றன. சிலர் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பாரம்பரியமான உணவுகளைப் பற்றியும் கூறியிருக்கிறார்கள். இது பெரிய ஒரு மாற்றத்திற்கான அறிகுறி. மக்களின் இந்த உற்சாகத்தைக் காணும் போது, நாம் இணைந்து சிறுதானியங்கள் தொடர்பான ஒரு மின்னணுப் புத்தகத்தினைத் தயாரிக்க வேண்டும், அதில் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உனவுகள் குறித்தும், தங்களுடைய அனுபவங்களையும் அதிலே மக்கள் பகிர்வார்கள், இதன் மூலம் சர்வதேச சிறுதானிய ஆண்டு தொடங்கும் முன்பாகவே நம்மிடத்திலே சிறுதானியங்கள் குறித்த ஒரு பொதுக் களஞ்சியமும் தயாராகி விடும், இதைப் பிறகு மைகவ் தளத்திலே வெளியிடலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: செப்டம்பர் 29ம் தேதியன்று குஜராத்திலே தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது பெரிய, சிறப்பான சந்தர்ப்பம்; ஏனென்றால், தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. கோவிட் பெருந்தொற்று காரணமாக கடந்த முறையின் ஏற்பாடுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது. இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள். அன்று விளையாட்டு வீரர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் விதமாக, நான் அவர்களுடன் இருப்பேன். நீங்கள் அனைவரும் தேசிய விளையாட்டுப் போட்டிகளைக் கண்டிப்பாக பாருங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.