தமிழக பயணம் மறக்க முடியாதது

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்தில் இருந்து விழா நடக்கும் இடத்திற்கு காரில் வந்தார். வழிநெடுகிலும், பா.ஜ.கவினர், பொதுமக்கள் திரளாக திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியும் காரில் மெதுவாக சென்றபடி, பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்து அவர்களது வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பின்னர், அரசு விழாவில் ரூ.31,530 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்திற்கு நன்றி. நேற்றைய பயணம் மறக்க முடியாதது’ என கூறியதுடன் தனது பயணம் தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், பா.ஜ.கவினர், பொதுமக்கள் அளித்த வரவேற்பு, தொண்டர்களை பார்த்து அவர் கையசைத்தது, வரவேற்பை ஏற்றுக்கொண்டது, மத்திய அரசு திட்டங்களை துவக்கி வைத்தது, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.