ஓ.ஐ.சியை கண்டித்த வெளியுறவுத்துறை

ஸ்ரீராம நவமி விழாவின்போது பாரதத்தின் பல்வேறு மாநிலங்களில், ஹிந்துக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டது. இதில், முஸ்லிம்கள், திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். பொதுமக்கள், காவலர்கள் என பலர் இதில் படுகாயமடைந்தனர். சிலர் கொடூரமாக கொல்லப்பட்டனர். பொதுமக்களின் வாகனங்கள், கடைகள், காவல்துறை வாகனங்கள், பொது சொத்துகள் பல தீ வைத்து எரிக்கப்பட்டன, சூறையாடப்பட்டன. இந்த சூழலில், ஸ்ரீராம நவமி விழாவின்போது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்த அறிக்கைக்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி) சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டுள்ளது.

ஓ.ஐ.சி அமைப்பின் பொதுச் செயலகம் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில், “ராம நவமி ஊர்வலங்களின் போது பாரதத்தின் பல மாநிலங்களில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து வன்முறை மற்றும் நாசவேலைகள் நிகழ்த்தப்பட்டது” என ஒரு பொய்யான தகவலை வெளியிட்டதுடன் இது, ஆத்திரமூட்டும் வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சியின் செயல்கள். இவை அதிகரித்து வரும் முஸ்லிம் வெறுப்பு மற்றும் பாரதத்தில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைப்பதன் தெளிவான வெளிப்பாடாகும். இதுபோன்ற செயல்களைத் தூண்டுபவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவும், நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்தவும்” பாரத அரசு நடவடிக்கை எடுக வேண்டும்” என கூறி, அது குறித்த தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது.

ஓ.ஐ.சி அமைப்பின் இத்தகைய வகுப்புவாதத்தை வளர்க்கும் விஷமத்தனமான அறிக்கைக்கு, பாரதம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. ஓ.ஐ.சி அறிக்கை குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “ஓ.ஐ.சி செயலகம் பாரதம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது அவர்களின் வகுப்புவாத மனப்பான்மை மற்றும் பாரத எதிர்ப்பு செயல்திட்டத்திற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு. பாரத விரோத சக்திகளால் தொடர்ந்து கையாளப்படுவதன் மூலம் ஓ.ஐ.சி அதன் நற்பெயருக்கு சேதம் விளைவித்துக்கொள்கிறது” என கண்டித்தார்.