செங்கோல் நிகழ்வு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது

நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்றும், அவ்வாறு கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறிப்பிட்டதொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த சிலர் சொன்னதாக சில அறிக்கைகளைக் கண்டோம். 1947ல், ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்கப்பட்டது குறித்த வரலாற்றைப் பொய் என்று இந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி கூறியதாகத் தெரியவருகிறது. ஆட்சி மாற்றத்தின்போது, அதனை அடையாளப்படுத்தும் சடங்கை செய்விக்க அழைக்கப் பெற்றோம் என்பது நம்முடைய ஆதீனத்தின் பதிவுகள் உட்பட, பலவகையான ஆதாரங்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜி அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட தம்முடைய ஆதீனகர்த்தர், அதற்குத் தக்க செங்கோல் செய்வித்து, முறையான சடங்குகளுக்குப் பிறகு அதனை மவுண்டபேட்டன் பிரபுவிடம் கொடுத்து வாங்கி அதைத் தொடர்ந்து செங்கோலை ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கச் செய்தார்கள் . பண்டித நேருவிடம் செங்கோலை வழங்கிய தம்பிரான் சுவாமிகள், செங்கோல் என்பது சுய ஆட்சியின் சின்னம் என்பதையும் தெளிவாகத் தெரிவித்தார். அரசியலுக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக இந்தச் சடங்குகளும் நிகழ்வுகளும் பொய் அல்லது போலி என்று கூறுதல், எமது நம்பிக்கைத் தன்மையினமீது ஐயம் எழுப்புதல், ஆட்சி மாற்றத்தின் அடையாளம் செங்கோல் என்பதன் முக்கியத்துவத்தைக் குறைக்க முயல்தல் ஆகியவை மிகுந்த வருத்தத்திற்குரியவை. இவை தவிர்க்கப்பட வேண்டியவை” என்று கூறப்பட்டுள்ளது.