காலாவதியானது திராவிட மாடல்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஆங்கில ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில், “திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி. திராவிட மாடல் என்பது நமது ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானது. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. நாங்கள் பரஸ்பரம் மரியாதையாகவே நடந்து கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் நல்ல உறவு இருக்கிறது. ஆனால், ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி எல்லை தாண்டி செயல்படுகிறார் என்று தி.மு.க அரசு முன்வைப்பது பொய்யான குற்றச்சாட்டு. அது முழுக்க முழுக்க அபத்தமானது. ஆளுநருக்கு என்று ஒரு எல்லை உள்ளது. அது அரசியல் சாசனத்தால் வகுக்கப்பட்டது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அறிந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும்? நான் தமிழக மக்களுக்கு உண்மையை மட்டுமே உரைப்பேன் என்று உறுதிமொழியை நான் எடுத்திருக்கிறேன். தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகை நிதி பற்றி பொய் கூறியுள்ளார். அவர் பெட்டி கிரான்ட்டில் விதிமீறல் என்று கூறினார். அந்த வார்த்தை 2000ம் ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது. ஆளுநர் மாளிகை செலவினம் பட்ஜெட்டுக்கு உட்பட்டது. ஆனால் அதற்கென வரம்பு இல்லை என்றே நிதிக் கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆளுநரின் விருப்புரிமைக்கு கட்டுப்பாடில்லை. அதனால் பெட்டி கிரான்ட்டில் வரம்பு மீறல் என்பதே அப்பட்டமான பொய். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக் கழக மசோதா பல்கலைக் கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக உள்ளதால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது” என்றார்.