‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக அரசு தலைமை வழக்கறிஞர் பிறப்பித்த உத்தரவு ரத்து

துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் வகையில் முந்தைய உத்தரவை திரும்பப்பெற்ற தற்போதைய அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2020 ஜன.14 அன்று ‘துக்ளக்’ பத்திரிகையின் 51-வது ஆண்டு விழாவில் பேசிய ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள்குறித்து தனிப்பட்ட முறையில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

இதையடுத்து குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.துரைசாமி அளித்த மனுவை அப்போதைய அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண் நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்குப் பிறகு முந்தைய உத்தரவை ரத்து செய்து, குருமூர்த்திக்கு எதிராக அவமதிப்பு வழக்குதொடர அனுமதி கோரி தற்போதைய அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரத்திடம், வழக்கறிஞர் துரைசாமி மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தார். அதையடுத்து முந்தைய உத்தரவை அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் திரும்பப்பெற்றார். அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து எஸ்.குருமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, மனுதாரரான துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடரும் வகையில், முந்தைய அரசு தலைமை வழக்கறிஞர் பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற்ற தற்போதைய அரசு தலைமை வழக்கறிஞரின் உத்தரவை ரத்து செய்தார்.