கோபம் எனும் ஆணி

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி எல்லோரையும் பேசி விடுவான். ஆனால், பிறகு அவர்களிடம் வருத்தம் தெரிவித்துவிடுவான்.

நாளடைவில் அவனை பலருக்கு பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்று வழி தெரியவில்லை.

அவனுடைய அப்பா, ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார். ஒவ்வொரு முறை ஆத்திரப்படும் போதும் சம்பந்தப்பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்துவிட்டு, வீட்டுக்குப் பின்னால் உள்ள மரவேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும்வரை அறைந்து ஏற்றிவிடு என கூறினார்.

முதல் நாள் மட்டுமே வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்தான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே என, நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொண்டான்.

நாளடைவில் கோபம் குறைந்து, வேலியில் ஆணி அறைவது குறைந்தது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் சென்று விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சி. ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல், அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் அதனை உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற்றான்.

பாலமுருகன்