முதல்வருக்கு சவால்விட்ட ஆளுநர்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான், “கேரள பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் நபர்களைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, தற்போதைய துணைவேந்தர்களுக்கு எதிராக நான் செயல்படுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் நான், எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் நபர் மட்டுமல்ல வேறு யாராவது ஒருவரை அவ்வாறு நியமித்திருக்கிறேனா என்று அவரை கேட்கிறேன். அவ்வாறு நான் நியமித்ததாக ஒரேயெரு உதாரணத்தை அவர் காட்டினாலும் நான் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன். அவ்வாறு காட்ட முடியாவிட்டால், அவர் பதவி விலகத் தயாரா? எனக்கு எதிராக மிகப் பெரிய குற்றச்சாட்டை வைக்கும் அவர், எதையும் ஆதாரத்துடன் பேச வேண்டும். கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் அச்சம் நிறைந்த ஆட்சியே நடக்கிறது. தங்கக் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் மீது நான் குற்றச்சாட்டு எதையும் கூறவில்லை. ஆனால், இவ்வக்கில் அவர் பதில் அளிக்க வேண்டிய கேள்விகள் கண்டிப்பாக இருக்கின்றன. தங்க கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டின் கீழ் முதல்வரின் செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். முதல்வருக்குத் தெரியாமல்தான் இது நடந்ததா? அப்படி அவருக்குத் தெரியாமல் இது நடந்தது என்றால் முதல்வரின் திறன் குறித்த கேள்விகள் எழுகின்றன. தங்கக் கடத்தலுக்கு துணைபோனவர்கள் முதல்வ்வர் அலுவலகத்தில் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவருக்கான எல்லையை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆளுநரின் அழைப்பை முதல்வர் நிராகரித்துள்ளதன் மூலம் அவர் எல்லையை மீறி உள்ளார்” என்று கூறினார்.