தி.மு.கவை கடிந்துகொண்ட தலைமை நீதிபதி

தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்றம், எது இலவசம், எது நலத்திட்டம் என்பதில் வரையறை தேவை. இலவசம் வழங்குவது என்பது மிகமுக்கிய பிரச்சனை. நாட்டின் நலனுக்கான, மிகவும் சிக்கலான பிரச்சனை.  அனைத்து திட்டங்களையும் கண்மூடித்தனமான இலவசங்கள் எனக் கூறவில்லை. இது குறித்த விவாதம் தேவை. அனைத்து தரப்பினரும் தேர்தல் இலவசம் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக வாதிடுகிறீர்கள். நாங்கள் மொத்தமாகவே இலவசம் அறிவிப்பு தொடர்பாக கட்டுப்பாடு வேண்டும் என நினைக்கிறோம் என கூறினர். மேலும், தி.மு.க வழக்கறிஞர் வில்சனிடம் பேசியவ் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, உங்கள் கட்சி மற்றும் அமைச்சர்கள் பேசுவதை கவனித்து கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறோம் என்று எண்ணி விடவேண்டாம். தி.மு.க மட்டும் தான் சாதுரியமான, புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம். பல விவகாரங்கள் குறித்து பேசாமல் இருப்பதால் அதை அறியாமல் இல்லை என நினைக்க வேண்டாம்’ என்றார்.