பா.ஜ.க மகத்தான வெற்றி பெறும்

அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களில், தி.மு.க மற்றும் திருணமூல் காங்கிரசுக்காக பிரசார வியூகத்தை அமைத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர், அந்த தேர்தலுக்குப் பின், அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், நடிகர் ஷாருக்கான் உள்ளிட்டோரை அண்மையில் சந்தித்துப் பேசினார். இது, ‘மிஷன் 2024’ எனப்படும் அடுத்த பார்லிமென்ட் தேர்தலை ஒட்டிய திட்டமிடல் என தகவல் வெளியானது. பா.ஜ.,வை எதிர்த்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைப்பது பற்றியும் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து பேசிய இந்திய குடியரசுக் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, ‘கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் துணையின்றி தான் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக 303 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 லோக்சபா தேர்தலிலும் பிரதமர் மோடியின் தலைமைக்கே மக்கள் ஆதரவளிப்பார்கள். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்’ என தெரிவித்துள்ளார்