அனைவரையும் சென்றடைவதே லட்சியம்

மத்திய அரசின் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி திட்டத்தின்கீழ், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்கும் திட்டத்தை, தெற்கு நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் டாக்டர். வீரேந்திர குமார், மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய நிதின் கட்கரி, “இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சமுதாயத்தின் கடைக்கோடி நபரையும் சென்றடைவதே மத்திய அரசின் நோக்கம். 2016ம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமை சட்டத்தை இயற்றியது. இதன் அடிப்படையில், 2022 பிப்ரவரி 27 முதல் ஏப்ரல் 23 வரை, தேசிய மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை கணக்கெடுக்கும் முகாம்கள் நடத்தப்பட்டன. இதில்  நாக்பூரில் சுமார் 36,000 பேர் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ரூ. 34.83 கோடி மதிப்பீட்டில், 2 லட்சத்து 41 ஆயிரம் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் வழங்கப்படவுள்ளன” என தெரிவித்தார். இந்த முதல் நிகழ்ச்சியில், 9,018 பயனாளிகளுக்கு ரூ. 9 கோடிக்கும் அதிகமான மதிப்பில் 66 ஆயிரம் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த உபகரணங்களுள், கைகளால் இயக்கப்படும் மூன்று சக்கர வாகனங்கள், சக்கர நாற்காலிகள், பார்வை திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்கீரினிங் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளிட்ட 43 கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.