டாடாவின் எலெக்ட்ரிக் கார்கள் திட்டம்

அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் 76-வது ஆண்டு அறிக்கையில், அதன் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்திருக்கிறார். ‘இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனச் சந்தை சீராக உயர்ந்து வருகிறது. தற்போது மொத்த வாகன விற்பனையில் 2 சதவீதம் அளவுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்கு உள்ளது. வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும். அதனால் அதற்கு ஏற்ப, வரும் 2025-ம் ஆண்டுக்குள் 10 புதிய எலெட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். சார்ஜ் ஏற்றும் மையங்களை நாடு முழுவதும் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பேட்டரி உற்பத்தியில் டாடாவுடன் இணைந்து பணியாற்றும் நிறுவனங்களை நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம்’ என தெரிவித்தார். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வசம் தற்போது நெக்ஸான் இவி மற்றும் டிகார் இவி என்ற இரு எலெட்ரிக் வாகனங்கள் உள்ளன. நெக்ஸான் இவி கடந்த ஆண்டு ஜனவரில் அறிமுகம் செய்யப்பட்டு இதுவரை 4,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகி இருக்கிறது. அட்ராஸ் மாடலில் எலெக்ட்ரிக் கார் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.