தமிழக பயங்கரவாதி டெல்லியில் கைது

ஆயுதப் பயிற்சி பெற எல்லை கடந்து பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்த தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட இரண்டு முஸ்லிம் பயங்கரவாதிகள் டெல்லியில் கைது செய்யப்பட்டனர். பாரதத்தில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்காக ஆயுத பயிற்சி பெற சட்டவிரோதமாக எல்லை கடந்து பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருக்கும் சிலர் மும்பை வழியாக டெல்லி வருகின்றனர் என டெல்லி காவல்துறைக்கு கடந்த 14ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் டெல்லி செங்கோட்டையின் பின்புறம் உள்ள சுற்றுச்சாலையில் வந்த இரண்டு மர்ம நபர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்களுல் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த அப்துல்லா என்ற அப்துல் ரகுமான் என்பதும் மற்றொருவர் மகாராஷ்டிராவை சேர்ந்த காலித் முபாரக் கான் என்பதும் தெரியவந்தது. பாகிஸ்தானில் உள்ளவர்களால் சமூக வலைதளம் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்ட இருவரும் பாரதத்தில் பயங்கரவாத செயல்களை செய்ய திட்டமிட்டுள்ளனர். பின்னர், பாகிஸ்தான் நபர்களின் வழிகாட்டலின்படி எல்லை கடந்து அந்நாட்டுக்கு சென்று சிறப்பு ஆயுத பயிற்சி பெறவும் முடிவு செய்துள்ளனர் என டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர். அந்த பயங்கரவாதிகளிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள், ஒரு கத்தி, கம்பியை துண்டிக்கும் கருவி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.