தமிழக அரசின் பாதுகாப்பு குறைபாடுகள்

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆளுநர் மாளிகையில் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஆளுநரைச் சந்தித்து பா.ஜ.க சார்பில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளோம். கடந்த ஜூலை மாதம் நமது பாரதப் பிரதமர் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளுக்காக தமிழகம் வந்திருந்தார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மாநில அரசு, தனது பணியிலிருந்து தவறியுள்ளது என்பதற்கான குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் கொடுத்துள்ளோம். குறிப்பாக பிரதமர் வந்திருந்தபோது, நேரு உள்விளையாட்டரங்கில், 150 நாடுகளில் இருந்து நிறைய பேர் வந்திருந்தனர். அந்த சமயத்தில் அங்கு பிரதமரின் பாதுகாப்புக்கு தேவைப்படும் மிக முக்கிய உபகரணமான மெட்டல் டிடெக்டர்ஸ் சரியாக வேலை செய்யவில்லை. மெட்டல் டிடெக்டர்ஸ் எல்லாம் பழுதடைந்து, சரிவர பராமரிக்காமல் இருந்தது. பெயரளவில் மட்டுமே காவல்துறையினர் அதை பல இடங்களில் வைத்திருந்தனர். பிரதமரின் வருகைக்கு பின்னர், மத்திய அரசின் பாதுகாப்பு அமைப்புகள், மாநில அரசுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதில், பிரதமர் வருகையின்போது மாநில காவல்துறையினர் பயன்படுத்திய மெட்டல் டிடெக்டர்கள் வேலை செய்யவில்லை. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இது எவ்வளவு பெரிய வேதனையான விஷயம். பாரதப் பிரதமர் வருகையின்போதே, பாதுகாப்பு பணிகளில் இவ்வளவு பெரிய குளறுபடிகளைச் செய்தால், சாதாரண மக்களுக்கு இவர்கள் எப்படி பாதுகாப்பு அளிப்பார்கள்? உளவுத்துறை, இதற்கு காரணம் நீங்கள்தான் என்று குற்றம்சாட்டி சில காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதமும் நம் கைகளில் உள்ளது. எனவே தமிழக அரசு இதற்கு பொறுப்பேற்று யாரெல்லாம் இதில் தவறு செய்திருக்கிறார்களோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்ததாக, தமிழகத்தில் கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள மெட்டல் டிடெக்டர்கள் எல்லாம் சரிவர வேலை செய்கிறதா என்பதை கண்டறிய ஒரு சுதந்திரமான தணிக்கையை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்” என தெரிவித்தார்.