தமிழ் மொழியை வளர்க்க வேண்டும்

மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான தமிழ் புத்தகங்கள், தமிழ் ஆராய்ச்சி புத்தகங்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி புத்தகங்கள் ஆகியவற்றை மதுரை உலக தமிழ்ச் சங்க நூலகத்தில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். நூலகத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும்.” என கோரியிருந்தார்.ஏற்கனவே இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குனர், “மதுரை உலகத் தமிழ்ச் சங்க நூலகத்தில் 26,035 புத்தகங்கள் உள்ளன.அங்கு நூலகம் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், “தமிழ் மொழியை வளர்க்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.சங்க கால தமிழ் இலக்கியங்களையும், நவீன கால தமிழ் இலக்கியங்களையும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.