தமிழ் கட்டாய பாடச்சட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்தில், ராகவன் என்பவர் தாக்கல் செய்துள்ள ஒரு பொதுநல மனுவில், “தமிழகத்தில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கி 2006ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது.2007ம் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 2016ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.மேலும், தமிழாசிரியர் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்காததால், தமிழாசிரியர்களை நியமிக்க முடியவில்லை என பல அரசு உதவி பெறும் பள்ளிகள் புகார் தெரிவித்துள்ளன. 2015ம் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ, உள்ளிட்ட பாடத் திட்ட பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடச் சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிலையிலும் அதை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாநில மொழிகளைக் கட்டாயமாக்கிய சட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் அதற்கு தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவுகள் உள்ளன.ஆனால், தமிழ் கட்டாய பாடச்சட்டத்தில் அத்தகைய எந்த பிரிவுகளும் இல்லை.இதனால் இதனை கண்டிப்புடன் அமல்படுத்த முடியவில்லை.2022ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவர்களில் 47,055 பேர் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர். எனவே, தமிழ் கட்டாய பாட சட்டம் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இந்த மனுவுக்கு, தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.