உலகம் நாடும் திறன்மிக்க இந்தியர்கள்

மத்திய அரசின் திறன் இந்தியா முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்திய மின்னணு திறன் துறை குழுமம், சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. தொழில்நுட்பத்தில் தொழில்துறைக்கு தேவையான திறன்களுடன் இளைஞர்களுக்கு அதிகாரமளித்து, அவர்களுக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், சாம்சங் புதுமை கண்டுபிடிப்புகள் திட்டத்தின் மூலம் 18 முதல் 25 வயதுடையோர்களான மூவாயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், “நாட்டில் திறமை பற்றாக்குறை ஏதுமில்லை. ஆனால் உலகம் முழுவதும் திறமைவாய்ந்த மற்றும் திறன்மிக்க இந்தியர்களின் தேவை அதிகரித்துள்ளது. தேசிய திறன் மேம்பாட்டு கழகமும், அமைச்சகமும் இணைந்து நீடித்த தீர்வுகளுக்காக தொழில்துறை மற்றும் திறன் சார்ந்த அமைப்புக்கிடையே நெருங்கிய நட்புறவை ஏற்படுத்தும் வகையில் செயலாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.