ஸ்வர்னிம் விஜய் பர்வ்

1971 போரில் பாரத வெற்றியின் 50 ஆண்டுகளையும் பாரத வங்கதேச நட்புறவையும் குறிக்கும் வகையில்லும் டெல்லி, இந்தியா கேட்டில் ‘ஸ்வர்னிம் விஜய் பர்வ்’ விழாவில் பேசிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘20ம் நூற்றாண்டில் நடந்த இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு, 1971ல் நடந்த போர் உலகின் மிகத் தீர்க்கமான போர். பாரதப் பிரிவினை மதத்தின் அடிப்படையில் ஒரு வரலாற்றுத் தவறு என்பதை இந்தப் போர் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. பாகிஸ்தான் 1971 தோல்விக்குப் பிறகு, தொடர்ந்து பினாமி போரை நடத்தி வருகிறது. பயங்கரவாதத்தை வேரிலிருந்து அகற்றும் பணி நடந்து வருகிறது. நேரடி போரில் வெற்றி பெற்ற நாம், மறைமுகப் போரிலும் வெற்றி பெறுவோம். தெற்காசியாவின் வரலாற்றையும் புவியியலையும் மாற்றிய 1971 போரில் பாரத ராணுவத்தின் புகழ்பெற்ற வெற்றியை நினைவுகூருகிறது ‘ஸ்வர்னிம் விஜய் பர்வ்’.  இப்போரில் ஈடுபட்ட துணிச்சலான பாரத வீரர்கள், அவர்களது குடும்பத்தினரின் தியாகத்திற்கு தேசம் எப்போதும் கடமைப்பட்டிருக்கும். 1971ல் நடந்த போர் பாரதத்தின் ஒழுக்கம், ஜனநாயக மரபுகளுக்கு சிறந்த உதாரணம். ஒரு நாடு போரில் மற்றொரு நாட்டை தோற்கடித்த பிறகு, அந்நாட்டில் தனது ஆதிக்கத்தை திணிக்காமல், அதன் அரசியல் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதை வரலாற்றில் அரிதாகவே பார்க்க முடியும். பாரதம் அதனை செய்தது.  ஏனெனில் இது நமது கலாச்சாரம்’ என கூறினார்.