கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 180க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அந்த பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்வது, ஒட்டடை அடிப்பது, பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகளை பெருக்குவது உள்ளிட்ட புகைப்படங்கள் அடங்கிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை கண்ட மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், சக்கம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்து இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.