பயங்கரவாத தொடர்பு மாணவர் கைது

மத்திய உளவுத் துறையினர், ‘கியூ’ பிரிவு மற்றும் ‘ரா’ உளவுப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெருவில் வசிக்கும் அனர் அலி என்ற மானவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.  ஆற்காட்டிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படித்து வரும் இந்த மாணவர், அதிகமாக பாகிஸ்தான், வங்கதேச நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவது தெரிந்தது. அவரது அலைபேசியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்காணித்தனர். ஒரு வாரமாக, அனர் அலியின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்தனர். இதில் தகவல்கள் அனைத்தும் உறுதியானதால், பயங்கரவாதிகளின் தொடர்பில் இருந்த அனர் அலியை அவர்கள் கைது செய்தனர். மேலும், அவரது தொடர்பில் உள்ள மற்றவர்களின் விவரங்களை அறிய அவரது உறவினர்கள், உடன் படிக்கும் மாணவர்கள், கல்லுாரியில் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, கர்நாடகா மாநிலம், பெங்களூரு அல்சூரில் பதுங்கியிருந்த அக்தர் உசேன் லஷ்கர் என்பவர் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்பில் இருந்தவர். அவர் கொடுத்த தகவலின் பேரில், சேலம், செவ்வாய்பேட்டையில் வசித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஒருவர், ஈரோடு, மாணிக்கம்பாளையத்தில் வசித்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில்தான் அனர் அலி குறித்து தெரியவந்துள்ளது