ஹமீது அன்சாரிக்கு வலுக்கும் எதிர்ப்பு

பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் நுஸ்ரத் மிர்சா, சமீபத்தில் பாகிஸ்தான் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், தான் பாரதத்துக்கு ஐந்துமுறை வந்துச்சென்றபோது அங்கு பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்காக உளவு பார்த்ததாகத் தெரிவித்தார். இந்த செய்தி கடும் அதிர்ச்சியை அளித்தது. அதைவிட முக்கியமாக, அந்த பேட்டியில் அவர், தனது 2010 வருகையை பேட்டியில் குறிப்பிடுகையில், “முகமது ஹமீது அன்சாரி துணை ஜனாதிபதியாக இருந்த நேரத்தில் நான் பாரதத்திற்கு அழைக்கப்பட்டேன்”  என கூறியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சமூக ஊடகங்களில் மக்கள் ஹமீது அன்சாரியை துரோகி என கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஹமீத் அன்சாரி பாரத பிரிவினைவாத சக்திகளுடன் கைகோர்த்து செயல்படுவது இது முதல்முறையல்ல. இந்தியன் அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில் (IAMC)  கடந்த ஜனவரி 26 அன்று ஏற்பாடு செய்த ஒரு மெய்நிகர் நிகழ்வில் பேசிய அன்சாரி, பாரதத்தில் சமீபகாலமாக சகிப்பின்மை அதிகரித்து வருவதாகக் குறைகூறியிருந்தார். உருதுவை தேசிய மொழியாக்க வேண்டும் என கூறினார். ஆகஸ்ட் 2017 ல் துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து வெளியேறிய பிறகு, செப்டம்பர் 2017ல் கேரளாவில் பி.எப்.ஐ என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். 2007 முதல் 2017 வரை பாரதத்தின் 12வது துணை ஜனாதிபதியாக இருந்த அன்சாரி ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல ஓய்வுபெற்ற தூதரும்கூட என்பது இந்த சூழலில் சிந்திக்கத்தக்கது. நுஸ்ரத் மிர்சா தனது பேட்டியில், பாரதத்தில் தற்போது சுமார் 67 பிரிவினைவாத இயக்கங்கள் நடக்கின்றன, பாரதத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அவை பரவியுள்ளன. பாரதத்தில் உள்ள அனைத்து உருது பத்திரிகைகளின் ஆசிரியர்களும் பல செய்தி சேனல் உரிமையாளர்களும் எனக்கு நல்ல நண்பர்கள். பாகிஸ்தானில் நல்ல தலைமை இல்லாததால் பாரதம் குறித்து நான் சேகரித்த தகவல்கள் பயன்படுத்தப்படாமல் போய்விட்டது. பயங்கரவாத நிதி கண்காணிப்பு பட்டியலில் உள்ள பாகிஸ்தானை அது உன்னிப்பாக கவனித்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.